30 டிசம்பர், 2010

மார்ச்சில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

* 21 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 268 பிரதேச சபைகளுக்கு தேர்தல்.

* ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் வேட்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

* அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் சகல உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும்.



நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களும் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் கலைக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யவென எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தல் நடாத்தப் படும் எனவும் அமைச்சர் கூறினார்.

உத்தேச வட்டார முறைப்படி தேர்தலை நடாத்துவதற்குக் காலம் போதாதிருப்பதால் தற்போது நடைமுறையிலிருக்கும் தேர்தல் முறைப்படியே தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ம் திகதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவங்களை கட்சியின் தலைமையகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை உத்தேச வட்டார முறைப்படி நடாத்துவதாயின் அதற்கு எல்லைகளை நிர்ணயிக்கவென குறைந்தது இரு வருடங்களாவது காலம் எடுக்கும். ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் கடந்த வருடம் முடிவுற்ற போதிலும் ஒரு வருட காலம் நீடிக்கப்பட்டது. அதனால் மேலும் காலத்தை நீடிக்காது தேர்தலை நடாத்துவதற்கே திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

தற்போது நாட்டில் 18 மாநகர சபைகள், 42 நகர சபைகள், 270 பிரதேச சபைகள் உள்ளன. இதேவேளை ஹம்பாந்தோட்டை நகர சபையும், தம்புள்ள மற்றும் கடுவெல பிரதேச சபைகளும் மாநகர சபைகளாக தர முயர்த்தப்பட்டிருப்பதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக