4 நவம்பர், 2010

அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் கத்தோலிக்க பேராயர்கள் சாட்சியம்






இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்று கத்தோலிக்க பேராயர்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் அவர்கள் வலியுறுத்தினர்.

கர்தினாலாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பேராயர் அதி வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க திருச்சபையினர் நேற்று (03) நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் சாட்சிய மளித்தனர்.

வன்முறைகளுக்கான மூல காரணத்தையும் இனங்களுக் கிடையே அமைதியின்மை யையும், சந்தேகத்தையும், நம்பிக் கையீனத்தையும் இல்லாதொழிப்ப தற்கு அரசியல் தீர்வே ஒரே வழியாகுமென்று பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

சகல பாடசாலைகளிலும் மூன்று மொழிக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டுமென்று குறிப்பிட்ட பேராயர், அதன் மூலம் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படுமென்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம், சிங்களமும் தமிழும் உத்தியோக பூர்வ மொழிகளாகவும் தேசிய மொழிகளாகவும் அரசியலமைப்பில் பிரகடனப்படுத்த வேண்டுமென்றும் பேராயர் குறிப்பிட்டார். ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை சாட்சியமளிக்கையில், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களுக்குப் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் மலையகப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாகவும் ஆயர் சுட்டிக்காட்டினார். தேவேளை மக்கள் இழந்துவிட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவி புரிய வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளால்

கொல்லப்ப ட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த சட்டத்தரணி சமில் பெரேரா சாட்சியமளிக் கையில், புலிகள் இயக்கம் தோற்கடிக்கப் பட்டுள்ளதால் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் நீக்கிவிடலாமென்று ஆலோசனை தெரிவித்தார். வடக்கு, கிழக்குப் பதிகளில் சிவில் நிர்வாகம் பலப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

அருட்தந்தை ஜோர்ஜ் சிகாமணி சாட்சியமளிக்கையில், வடபகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அந்தக் காணிகளை உரிய பொதுமக்களிடம் கையளிகக் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். உயர் பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்தியிருப்பதால், பெறுமதியான விவசாய நிலங்கள் வீணாகுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். முல்லைத்தீவு, நந்திக் கடல் பகுதி மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.

சம்பூர் மக்கள் அவர்களின் சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று கூறியதுடன் இந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு அவர்களை அரசாங்கம் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

‘வன்னி மக்கள் தமக்கே உரிய தனித்துவமான வாழ்வியலைக் கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வாறே வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

அருட்தந்தை ரஞ்சித் மதுராவல சாட்சியமளிக்கையில், வட பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைச் சீராக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். அந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் களையப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

சாட்சியத்தின் நிறைவில் குறுக்கு விசாரணை செய்த ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா, அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் உடனடியாக நீக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகக் கூறியதோடு, அது தொடர்பில் சட்த்தரணி சமில் பெரேராவின் கருத்தினைக் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த அவர், நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் இந்தச் சட்டங்களை நீடிப்பதற்கான அவசியம் இல்லை எனக் கருதுவதாகக் கூறினார். நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கான முதற்படியாக குறைந்தது அவசரகாலச் சட்டத்தையாவது நீக்க வேண்டுமென்றார்.

நிறைவாகக் கருத்துரைத்த பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. பிரிவினையை ஒருபோதும் நாம் ஆதரித்ததில்லை. இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்வதற்கு ஆரம்பம் முதலே முயற்சித்தோம். ஆனால், அடிப்படையில் இரு தரப்பிற்கும் நம்பிக்கை இல்லாததால் அது பலனளிக்கவில்லை’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக