4 நவம்பர், 2010

சம்பந்தனுடன் தமிழ்க் கட்சி அரங்கம் சந்திப்பு: எம்.கே சிவாஜிலிங்கம்

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்தை நடத்தியதாக முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இது குறித்துத் தொடர்பு கொண்டு கேட்ட போதே, சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"நானும், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈழ மக்கள் விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் தலைவர் சிறிதரன் ஆகியோரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேற்று கொழும்பில் மாலை 5.00 மணியளவில் சந்தித்து கலந்துரையாடினோம்.

இதன் போது வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்று கொடுக்க ஒருமித்தவாறு பதில் அளித்தாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். ஆனால், சம்பந்தன் வெளிநாட்டில் இருந்தமையால் எமக்குப் பதில் எதுவும் கிடைக்கவில்லை.

தற்பொழுது அவர் நாடு திரும்பியுள்ளார். அவருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை மீண்டும் வழங்கியுள்ளோம். இது தொடர்பில் கூட்டமைப்பின் ஏனைய அங்கத்தவர்களுடன் கலந்துரையாடி தமது தீர்மானத்தைத் தெரிவிப்பதாக சம்பந்தன் கூறியிருக்கின்றார்.

மேலும் நேற்றைய அரங்கத்தின் கூட்டத் தொடரில், வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குயேற்றம், காணிப் பிரச்சினை, போர் கைதிகளின் விடுதலை என பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இந்நிலையில் மக்களின் பிரச்சினை தொடர்பில் மகஜர் ஒன்றில் கையெழுத்திட்டு 19, 20 ஆம் திகதிகளில் ஜனாதிபதியைச் சந்தித்து, மகஜர் ஒன்றைக் கையளித்து அவருடன் கலந்துரையாட உள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்து தருவார்.

அத்துடன், நாம் ஏற்கனவே கூறியதைப் போன்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இரண்டாம் கட்டமாக மலையகக் கட்சிகளை இணைப்பது பற்றியும் நாம் ஆராய்ந்துள்ளாம்" என்று தெரிவித்தார்.

நேற்றைய அரங்கக் கூட்டத்தொடரில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி, ஆனந்தசங்கரி தலையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட 10 தமிழ் அரசியல்கட்சிகள் கலந்து கொண்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக