4 நவம்பர், 2010

யாழ். நிலைமை குறித்து இராணுவத்தளபதி - அங்கஜன் கலந்துரையாடல்




யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலைமை குறித்தும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளர் இ.அங்கஜன் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூரியவை கொழும்பில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"வலிவடக்கு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் என்னைச் சந்தித்து தாங்கள் எப்போது சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்குகி கொண்டு வந்து துரிதப்படுத்தித் தருமாறும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நான் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத்ஜெயசூரியாவை சந்தித்து கலந்துரையாடினேன்.

இதுகுறித்து அவர் என்னிடம் தெரிவிக்கையில்,

"வலிவடக்கு பிரதேச மக்கள் தமது சொந்த இடங்களில் சென்று குடியமர ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் தான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பகுதிகள் மீண்டும் கண்ணிவெடி அகற்றிய பரிசோதகர்களைக் கொண்டு உறுதிப்படுத்தப்படுகின்றன.

இது வெகுவிரைவில் முடிவடைந்து விடும். அதன்பின் அந்த மக்கள் தமது சொந்த இடத்தில் இருந்து கொண்டு மற்றவர்களைப் போல தமது அன்றாட பணிகளைச் சுதந்திரமாக செய்ய தான் வழிவகைகளைச் செய்யலாம்" எனத் தெரிவித்தார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளில் தற்போது திருட்டுக்கள் அதிகரித்து வருவதாகவும் பகல் வேளைகளிலும் திருட்டு இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இது குறித்து நான் இராணுவத்தளபதியிடம் தெரிவித்தபோது, பொலிஸார் மிகவும் விழிப்பாகச் செயற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பொலிஸாருக்கு உடனடியாகத் திருட்டுக் குறித்த தகவல்களைத் தெரியப்படுத்தினால் அவர்களால் உடனடியாகச் செயற்பட முடியும் எனவும் பொலிஸாருக்கு பொதுமக்கள் தம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் இதனை பொதுமக்களுக்குக் கூறுமாறும் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மேற்படி விடயம் குறித்தும் வடமாகாண இராணுவக் கூட்டுப்படைச் சிறப்புத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவை வெகுவிரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக