5 அக்டோபர், 2010

வெள்ளைக்கொடி வழக்கு ஒத்திவைப்பு - பொன்சேக நீதிமன்றம் வந்த போது பரபரப்பு!





இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேக, தன் மீது தொடரப்பட்டிருக்கும் வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பான மற்றுமொரு வழக்கிற்காக இன்று நீதிமன்றில் ஆஜரானார்.

இதன் போது வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும், இதனை தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இன உணர்வுகளை தூண்டி குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில், அவர் கருத்துக்களை வெளியிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.யுத்தம் நடைபெற்ற இறுதி நாட்களில் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்திடம் சரணடைய வந்த வி.புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பிரிகேடியர் சாவேந்திர சில்வாவிற்கு கட்டளையிட்டதாக சரத் பொன்சேக சண்டே லீடர் பத்திரிகைக்கு செவ்வி அளித்திருந்தார்.

இதனை உறுதி செய்யும் முகமாக, சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் லால் விக்ரமதுங்க, படப்பிடிப்பாளர் மற்றும் செய்தியாளர் ஆகியோருடன் சரத் பொன்சேகவை தாம் சந்திக்க சென்றதாக பெட்ரிக்க ஜேன்ஸ் இன்று நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், தான் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை எனவும் சரத் பொன்சேக தெரிவித்தார். இதனை தொடந்து வெள்லைக்கொடி வழக்கு மீதான விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இதேவேளை இன்று முற்பகல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
சரத் பொன்சேகவின் மனைவி அனோமா பொன்சேக, ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.க உறுப்பினர்கள், சில தமிழ் அரசியல் பா.உறுப்பினர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போதே, சரத் பொன்சேக தனி வாகனமொன்றில் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார். அவர் தனது வெள்ளை நிற தேசிய உடையை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொன்சேக வாகனத்திலிருந்து இறங்கியது நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் நிலவியது. பொன்சேகவின் வாகனத்தை சூழ்ந்த ஆதரவாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது பொன்சேகதான் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக