8 அக்டோபர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு மட்டக்களப்பில் நாளை சாட்சியங்களை பதிவு செய்யும்



கற்றுக் கொண்டபாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு மட்டக்களப்பில் எதிர்வரும் 09,10,11ம் நாட்களில் சாட்சியங்களைப் பதிவு செய்யவிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி இந்த ஆணைக்குழு நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலும், நாளை மறுதினம் 10ஆம் திகதியும் முற்பகல் 9 மணி தொடக்கம் நன்பகல் 12.00மணி வரையில் ஓட்டமாவடிப் பிரதேச செயலகத்திலும், திங்கள் அன்று 11ம் திகதி முற்பகல் 08.30 மணி தொடக்கம் பிற்பகல் 11.30 மணி வரையில் செங்கலடி பிரதேச செயலகத்திலும், சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை 11ஆம் திகதி திங்கட்கிழமை இந்த ஆணைக்குழு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் சாட்சியங்களை பதிவு செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்த போதிலும் தற்பொழுது அது இரத்துச் செய்யப்பட்டு அப்பிரதேசத்திற்கான சாட்சியங்களை மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், ஓட்டமாவடி, செங்கலடி பிரதேச செயலகங்களில் நடைபெறும் அமர்வுகளில் பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு இலங்கை மக்களிடையே சமாதானத்தையும், இணக்கப்பாட்டையும் மேம்படுத்தும் நோக்கில் 2002.02.21ஆம் திகதிக்கும் 2009.5.19ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்காக விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரிவு 2இன் கீழ் ஜனாதிபதியால் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு போர்நிறுத்த உடன்படிக்கை தோல்வியில் முடிவடையத் தூண்டுதலளித்த காரணிகளும் அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்வுகளும், ஆளவரும், குழுவெதுவும் அல்லது நிறுவனமெதுவும் நேரடியாக அல்லது மறைமுகமாக போர் நிறுத்த உடன்படிக்கை செயலிழப்பதற்குப் பொறுப்பு வகிக்கின்றதா?

மற்றும் அத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்து கொள்வதற்காக அத்தகைய நிகழ்வுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள், சுபீட்சமும், இணக்கப்பாடும,; அமைதி நிலையும் குடி கொண்ட யுகமொன்றைத் தோற்றுவிக்குமுகமாக இலங்யையின் இனப்பிரிவுகளுக்கு இடையில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தினையும் மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள்.

என்பவற்றை பொதுவான இலக்குகளை எய்துவதற்கு அவசியமாகின்ற அத்தகைய உதவிகளையும் தகவல்களையும் வழங்குமாறு நாட்டு நலனை எதிர்பார்க்கும் சகல மக்கள் நலன் விரும்பிகளிடம் வேண்டப்பட்டதற்கமைய இந்த ஆணைக்குழு முறைப்பாடுகளை பதிவு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக