31 அக்டோபர், 2010

இலங்கையின் இறுதி நேர யுத்த விவகாரங்களை அறிவதற்கு அமெரிக்கா காத்திருக்கிறது

இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்புகளாலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதிலும் அனைத்துத் தரப்பினருக்குமிடையிலான முரண்பாடுகளைக் களைவது தொடர்பிலும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரும், உதவிச் செயலாளருமான பிலிப் ஜே. குரோவ்லியே தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கமானது நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. அதன்போது அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு முன்னேற்றத்துக்கான இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றில் வைத்தே இந்தக் கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

தேர்தல் மூலம் மாபெரும் மக்கள் பலமொன்றைப் பெற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் அனைத்து இன மக்களிடையேயும் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை முடுக்கி விட்டு, எல்லா மக்களினதும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு செயற்படும் போதுதான் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயலகள் தொடர்பான விசாரணை குறித்த பேச்சுகள் உள்ளனவா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கத் தயங்கிய அவர், இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையான திறமைகள் விசேட பொறுப்புடமையாக மாறியுள்ளது என்னறார்.

இலங்கையின் எதிர்காலத்திற்கு அது மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேவேளை,ஒபாமாவின் மனித உரிமைகள் குறித்த விடயங்களில் ஏமாற்றமடைந்திருந்தாலும் தனது நிர்வாகத்தின் சிரேஷ்ட வெளிநாட்டுக் கொள்கை ஆலோசகர்களான சமந்தா பவர் மற்றும் டேவிட் பிரஸ்மன் ஆகியோரை கொழும்புக்கு அனுப்பி இலங்கையர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பதற்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் அவர் சார்ந்த ஜனநாயக கட்சிக்கும் ஆதரவை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா வாழ் தமிழர்கள் இலங்கை விவகாரங்களில் ஒபாமாவின் அடுத்த இருவருட கால பதவிக் காலத்தில் நெருங்கிய கவனம் செலுத்தப்படுவதற்கான அறிகுறி தென்படுவதாக உணர்கின்றனர் என பி.ஆர் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

புஷ் நிர்வாகம் தமது பக்கம் கவனம் செலுத்தாத காரணத்தால் இனியும் அத்தகைய உதவிகளை குடியரசுக் கட்சியிடம் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கா வாழ் தமிழர்களின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில்,

இவ்வருடம் அமெரிக்க தமிழர்கள் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். ஒபாமா நிர்வாகத்தை ஆதரிப்பதற்கு காரணம் உண்டு. இலங்கையில் தமிழர்களுக்கு உதவும் பொருட்டு அது நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

ஒபாமா நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர்கள் சமீபத்தில் இலங்கை சென்று இலங்கை வெளிநாட்டுக் கொள்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர். தமிழ் பிரதேசங்களுக்கும் அவர்கள் சென்று குடிமக்களுடனும் தமிழ் தலைவர்களுடனும் உரையாடியுள்ளனர். இலங்கையை நோக்கி அமெரிக்காவின் கண்கள் திருப்பப்பட்டுள்ளதற்கான சாட்சியமாக ஒபாமாவின் நிர்வாகம் முனைப்புடன் நடந்து கொண்டுள்ளதால் நாம் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக