31 அக்டோபர், 2010

அமெரிக்கா சென்ற விமானங்களில் வெடிபொருட்கள் ஒபாமா நிர்வாகம் அதிர்ச்சி: நாடு முழுவதும் உஷார்


வாஷிங்டன்: ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற சரக்கு விமானங்களில், வெடி பொருட்கள் அடங்கிய பார்சல்கள் இருந்தது, பிரிட்டன் மற்றும் துபாய் விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இது பயங்கரவாதிகளின் சதித் திட்டம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்சல்கள், நேற்று முன்தினம் பிரிட்டன் கிழக்கு மிட்லண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட, யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டன. இந்த பார்சல்கள் அனைத்தையும், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கிருந்த ஒரு பார்சலில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வெடிபொருள் பார்சல், அங்கிருந்து அகற்றப்பட்டது. இதுகுறித்த தகவல் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதேபோல், துபாயிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட இருந்த "பெட்எக்ஸ்' நிறுவனத்தின் சரக்கு விமானத்திலும் அதே வகையான வெடிபொருள் பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பார்சலும் ஏமன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்த தகவலும், அமெரிக்க அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: இந்த இரண்டு பார்சல்களுமே ஏமன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. சிகாகோவில் உள்ள யூத வழிபாட்டு மையங்களை தகர்க்கும் நோக்கத்துடன் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களை அடுத்து, அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சரக்கு விமானங்களை முழுமையாக சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உட்பட, மற்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடிபொருள் பார்சலை அனுப்பிய நபர் யார் என்பதை விசாரிக்கும் பணியில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அல் - குவைதா அமைப்புக்கு இந்த சதித் திட்டத்தில் தொடர்பிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, அமெரிக்கா சென்ற பயணிகள் விமானத்தில் இதேபோல் வெடிபொருட்கள் வைத்திருந்தது, உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆபத்து தவிர்க்கப்பட்டது. அந்த சதிச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு, இந்த சம்பவங்களிலும் தொடர்பிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,"வெடி பொருட்களை அனுப்பி வைத்தது, பயங்கரவாதிகள் தான் என, நம்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. யூத வழிபாட்டு மையங்களை தகர்ப்பதற்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிந்துள்ளது. இது போன்ற ஆபத்துகளில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இந்திய பயணத்துக்கு பாதிப்பு இல்லை: அமெரிக்கா செல்லவிருந்த சரக்கு விமானங்களில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து, அதிபர் ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரி ஜான் பிரென்னன் கூறியதாவது: வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களால், அதிபர் ஒபாமாவின் இந்திய சுற்றுப் பயணத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்திய பயணம் திட்டமிட்டபடி நடக்கும். அதிபர், ஒரு நாட்டுக்கு பயணம் செய்கிறார் என்றால், அது தொடர்பான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்தான், பயணம் இறுதி செய்யப்படும். அந்த வகையில் இந்திய பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிந்து விட்டன. இவ்வாறு ஜான் பிரென்னன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக