4 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் : டக்ளஸ்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டமூலம் சகல அதிகாரங்களுடனும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக முன்னணி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற 'கற்றுக் கொண்ட பாடங்களும் அனுபவங்களும்' தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையின் போது சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்,

"இலங்கை - இந்திய ஒப்பந்தமானது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சிறந்த வாய்ப்பைத் தமிழ் சமூகத்தினருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம், உருவானபோது புலிகளின் தலைமை அதனைத் தட்டிக்கழித்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றிருந்தால் இவ்வாறான அழிவுகள் ஏற்பட்டு இருக்க மாட்டா. அதேவேளை பிரபாகரன் மீது மட்டும் பொறுப்பைச் சுமத்திவிட்டுத் தமிழ் தலைமைகள் தப்பிவிடமுடியாது.

இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்த விடயத்தில் எமது கட்சி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனினும் உடன்படிக்கை கையில் எடுத்துக் கொண்டு துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கவலையடைகின்றோம்.

ஆரம்ப காலத்தில் ஆயுதமேந்திய தலைவர்களில் நானும் ஒருவன். அப்போதைய தவிர்க்க முடியாத காரணத்தினால் அது நடந்தது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக