10 ஆகஸ்ட், 2010

வைப்பாளர்கள் ஒரே நேரத்தில் பணம் கேட்டதால் நாட்டை விட்டு ஓடினேன்

சக்வித்தி இரகசிய பொலிஸாரிடம் தெரிவிப்பு

பணத்தை வைப்புச் செய்தவர்கள் ஒரே நேரத்தில் பணத்தை திருப்பிக் கேட்டதன் காரணமாக அதனை திருப்பிச் செலுத்த முடியாதிருந்ததாலேயே நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சக்வித்தி ரணசிங்க இரகசிய பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

வைப்புச் செய்யப்பட்ட பணத்துக்கு முறையாக வட்டியை கொடுத்து வந்ததாகவும் அவர்களில் ஒரு சில ருக்கு அவர்கள் கேட்டுக் கொண்ட தையடுத்து முழுத் தொகையையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் வைப்புச் செய்தவர்கள் அனைவருக்கும் கொடுப் பதற்கு தனது நிதி நிறுவனத்தில் போதிய பணம் இல்லாதிருந்ததாகவும் அவர் கூறினார்.

ஒரு சில தொழில்களில் தான் வைப்புப் பணத்தை முதலீடு செய்திருந்ததாகவும் அதில் இருந்து வைப்பாளர்களின் வட்டியை கொடுத்து வரமுடிந்ததென்றும் ஆனால் ஒரு சிலருக்கு மொத்த வைப்புத் தொகையையும் கொடுத்ததால்தான் வங்குரோத்து நிலையை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்று போலிப் பெயரில் மீண்டும் திரும்பி வந்த சக்வித்தி அவரது மனைவியின் வீட்டில் வைத்து கடந்த 6ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சக்வித்தி மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு வருவதற்கு தமிழ்ப் பெயர்களில் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியிருந்தனர். இந்த போலி கடவுச் சீட்டுகள் வத்தளை ஹேகித்தயில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை போட்ட போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

சக்வித்தியிடம் இரகசிய பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் எனினும் அவரது சொத்து தொடர்பாக எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக