28 ஆகஸ்ட், 2010

அகதிகள் உறவினருடன் இணைய கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு

கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் குடும்பங்களை இணைப்பதற்கான தொடர்பு ஒன்றை இலங்கை குடிவரவாளர்களுக்கு உருவாக்கியுள்ளது.

நேற்று கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் எம் விசன்சீ கப்பலில் வந்திறங்கியுள்ளவர்கள் கனடாவில் வாழ்ந்து வரும் தங்களின் உறவுகளுடன் தொடர்பு கொள்வதற்கேற்ப தொலைத்தொடர்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் குடும்ப உறவுகளை மீளிணைத்தல் திட்டமானது, ஆயுதந்தாங்கிய போர்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் இதர துயர்மிக்க சம்பவங்களினால் தங்களின் குடும்பங்களைப் பிரிய வேண்டியிருந்த குடும்ப அங்கத்தவர்களுக்கு இச்சலுகையை அளித்துள்ளது.

இதன்மூலம், கனடாவில் உள்ள தங்களின் உறவினர்களுடன் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள அகதிகளுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

முதல்நிலை தொடர்பாடல்

தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைக் குடிவரவாளர்களுக்கும் கனடாவில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கும் முதல்நிலை தொடர்பாடல்களை ஏற்படுத்தும் விதமாக இந்த சேவையை கனடிய செஞ்சிலுவைச் சங்கம் பின்வரும் வழிகளில் விரிவாக்கியுள்ளது.

* எம்விசன்சீ கப்பலில் வந்தோரின் வேண்டுகோளின்படி கனடாவிலோ அல்லது வேறு நாட்டினிலோ வசிக்கும் குடும்ப அங்கத்தவர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

* கனடாவில் வசிப்பவர்கள், எம்விசன்சீ கப்பலில் வந்திறங்கிய தங்களின் உறவினர்கள் இருக்கக் கூடும் என நம்புமிடத்து அவர்களின் வேண்டுகோள்களை அறிந்து செயற்படுதல்.

* செஞ்சிலுவைச் சங்க செய்திப் பரிமாற்றம் மூலமாக கனடாவிலோ வேறு நாட்டிலோ ஆரம்பநிலை தொடர்பாடலை ஏற்படுத்துதல். இந்தச் செய்திப் பரிமாற்றம் கனடாவிலோ அல்லது வெகு தூரத்திலோ இருக்கும் உறவுகளின் உள்ளத்தில் சற்றேனும் அமைதியை ஏற்படுத்தும். ஒவ்வொரு வருடமும் கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் 500இலிருந்து 600 வரையிலான செஞ்சிலுவை செய்திப் பரிமாற்றங்களை அனுப்பவும், பெறவும் வழி செய்கிறது.

கனேடிய செஞ்சிலுவைச் சங்க குடும்ப இணைப்புத் தொடர்பு இலக்கம் 1-888-893-1300 ஆகும்.

கனேடிய எல்லைச் சேவைகள் முகவத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஓர் ஒப்பந்தத்தின்படி, கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் 1999ஆம் ஆண்டு தொடக்கம் குடிவரவு தடுப்பு மையங்களைப் பார்வையிட்டு வந்துள்ளது.

அங்குள்ள நிலைமைகள் உள்ளூர் மற்றும் பன்னாட்டுத் தரத்துடன் ஒப்பிட்டு கண்காணிக்கப்படும். தடுப்பு மையங்களுக்குச் செல்லும்போது கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் பின்வருவனவற்றைக் கண்காணிக்கும்:

* தடுப்பு நிலைமைகள்

* சட்டரீதியான பாதுகாப்பு முறைகள்
* குடும்ப அங்கத்தவர்களுடனான தொடர்பு
பயிற்றுவிக்கப்பட்ட அணிகளாக செயற்படும் பணியாளர்களினாலும் அர்ப்பணிப்பு நிறைந்த தொண்டர்களினாலும் தடுப்பு மையங்கள் பார்வையிடப்படுகின்றன.

கனேடிய செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை இயக்கம் ஆகியவற்றின் அங்கத்துவ அமைப்பாகும்.

இதனுள் சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனம் மற்றும் செம்பிறை சமூகங்கள், சர்வதேச செஞ்சிலுவைக் குழு மற்றும் 185க்கும் அதிகமான தேசிய செஞ்சிலுவை மற்றும் செம்பிறைக் குழுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கனடாவிலும் உலகம் முழுவதிலும் மனிதாபிமான வலுவை ஒன்றுசேர்த்து பாதிப்புக்குட்படும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக