19 ஜூலை, 2010

அரசியல் அமைப்புடன் தீர்வு குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்

அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் அதேவேளை, அரசியல் தீர்வுத்திட்டம் குறித்தும் அவதானம் செலுத்துவது காலத்துக்குப் பொருத்தமாக அமையும் என்று நாங்கள் கருதுகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களுக்கு பிரதான எதிர்க்கட்சி ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயம் என்பன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது :

மக்களுக்கு தேவையான மற்றும் நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களுக்கே ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும். அதன் அடிப்படையிலேயே மிகவும் நேர்மையான முறையில் ஆளும் தரப்புடன் எமது கட்சி பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றது.

தற்போதைய அரசியலமைப்பில் சில திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்பதனை நாங்களும் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் அவை நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவேண்டும். இதேவேளை தற்போதைய அரசியலமைப்பு திருத்த செயற்பாடுகளின்போது அரசியல் தீர்வு விடயம் குறித்தும் கலந்துரையாடுவது மிகவும் பொருத்தமாக அமையும் என்று நம்புகின்றோம்.

மேலும் அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுடனும் அரசாங்கம் பேச்சு நடத்தவேண்டும். அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தவேண்டியது முக்கிய விடயமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக