5 ஜூலை, 2010

அடிப்படை வசதிகளின்றி சிரமப்படும் மீளக்குடியேறிய கிளிநொச்சி மாவட்ட மக்கள்

இந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தில் என்னைத் தெரிவுசெய்த பிரதேச மக்களின் சார்பாகக் கலந்துகொண்டு அந்த மக்களின் தேவைகளையும் வேண்டுகைகளையும் இந்த மன்றத்தில் சமர்ப்பிப்பதற்குக் கிடைத்த இச்சந்தர்ப்பத்துக்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன். இந்த வரவு செலவுத்திட்டமானது யுத்தம் முடிந்த பின்னர் நாட்டை அபிவிருத்திசெய்யும் சூழலில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் இதை அபிவிருத்திக்கான வரவு செலவுத்திட்டமாகக் குறிப்பிடலாம்.

அதேவேளை இந்த வரவு செலவுத்திட்டமானது போர் முடிந்த பிறகு அந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் அந்தப் பிரதேசங்களினதும் மறுவாழ்வையும் மீளமைப்பையும் செய்வதற்கான உள்ளடக்கங்களைக் கொண்டு அமைய வேண்டுமெனக் கருதுகிறேன். இடப்பெயர்வின் துயரத்தையும் அது ஏற்படுத்திய வாழ்வின் கடினங்களையும் சுமந்தபடி மீள்குடியேறிய கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மக்களினுடைய குரல்களைப் பதிவுசெய்யுமாறு காலம் எனக்குப்பணித்துள்ளது. அதேவேளை முழுநாட்டினுடைய நலனுக்கு அவசியமான விடயங்கள் குறித்தும் என்னுடைய கவனத்தைப் பதிவுசெய்கிறேன். எனவே இவற்றின் அடிப்படையிலேயே இந்த மன்றில் என்னுடைய உரையைச் சமர்ப்பிக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

போருக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியேற்றப்பட தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் மீள்குடியேறிய மக்கள் இன்னமும் அடிப்படை வசதிகளுக்காகச் சிரமப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

அதேவேளை இந்தமாவட்டத்தில் இன்னும் சில பிரதேசமக்கள் மீள்குடியேற்றப்படாமல் நலன்புரி நிலையங்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். போரினால் முற்றாகவே அழிந்து போன இந்தமாவட்டத்தின் மீளுருவாக்கத்தைப் பற்றி அரசாங்கம் கவனமெடுத்திருக்கிறது. ஆனால் இந்த மீளுருவாக்கமும் இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்களும் நன்கு திட்டமிடப்பட வேண்டும். இந்த மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தன்மை, மற்றும் மாவட்டத்தில் உள்ள வளங்கள், சுற்றுச்சூழல் போன்றனவற்றையும் கவனத்திற்கொண்டு, அபிவிருத்தியையும் மீளமைப்பையும் செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், இந்த மாவட்டத்தின் பல்வேறு தேவைகளையும் தொடர்ந்து இங்கே மன்றின் கவனத்துக்குத் தரவுள்ளேன்.

இதைப்போலவே யாழ்ப்பாண குடாநாட்டிலும் மீள்குடியேற்றப் பிரச்சினைகள், உயர்பாதுகாப்பு வலய விவகாரங்கள் முதல் வேலை வாய்ப்பு பிரச்சினைகள் வரையாக ஏராளம் தேவைப்பாடுகளோடும் வேண்டுகைகளோடும் மக்கள் இருக்கின்றனர். அவற்றையும் நான் மன்றின் கவனத்துக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

கிளிநொச்சிமாவட்டம் ஒரு விவசாய பொருளாதார மாவட்டமாகும். இந்தமாவட்டத்தில், தென்னைப் பயிர்ச் செய்கை, நெற்செய்கை அத்துடன் ஆனையிறவில் மேற்கொள்ளப்பட்ட உப்புஉற்பத்தி, பரந்தனில் இயங்கிய இரசாயனத் தொழிற்சாலை, கடற்றொழில், கால்நடை வளர்ப்பு, காட்டுவளம், பனைவளம் மற்றும் பனைதென்னை உற்பத்தித் தொழில்கள் என, நிறைந்த பொருளாதாரக் கூறுகள் பல உள்ளன. ஆனால், இவை எல்லாமே இன்று சிதைந்தும் அழிந்தும் போயிருக்கின்றன.

விவசாயம்

கிளிநொச்சி மாவட்டம் "வடக்கின் நெற்களஞ்சியம்' என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு, நெற்செய்கையில் அதிக உற்பத்தியையும் வருவாயையும் ஈட்டிய மாவட்டமாகும். ஆனால், யுத்தத்தின்காரணமாக, அது சிதைந்து போயிருக்கிறது. இந்தமாவட்டத்தில் மீண்டும் விவசாயச் செய்கையை நிறைவாக்கும்போது, நாம் மறுபடியும் அந்த நிலையை எட்ட முடியும். அதேவேளை இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், மாவட்ட மக்களின் வேலைவாய்புக்கும் இடமளிக்கலாம்.

கிளிநொச்சிமாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்டிருக்கும் மக்கள், தற்போது விவசாயச்செய்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுடைய சிறுபோக நெற்செய்கைக்காக 6,269 ஏக்கர் நிலம் செய்கை பண்ணப்பட்டு, பயன்பெறும் நிலையை அடைந்துள்ளது.

தற்போது மீள்குடியேறிய 27,075 குடும்பங்களும் எதிர்வரும் பெரும்போகத்திற்கு 40,825 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளுவதற்கு தயாராக இருக்கின்றன. இந்த இலக்கில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு உதவும் முகமாக, விவசாயத் திணைக்களமும், விவசாயசேவைகள் திணைக்களமும் நீர்பாசனத்திணைக்களமும் விவசாயிகளைத் தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்த நெற்பயிர்ச்செய்கைக்கு, அங்கே தற்போது எதிர்நோக்கப்படும் முக்கிய பிரச்சினை உழவு இயந்திரங்களின் பற்றாக்குறையாகும்.

இந்த விதைப்பிற்காக, ஏறக்குறைய 500 உழவு இயந்திரங்கள் தேவையான நிலையில், 50க்கும் குறைவான உழவு இயந்திரங்களே கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன, என விவசாய சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மானிய அடிப்படையிலும் இலகுகடன் அடிப்படையிலும் விவசாயிகளுக்கு உதவுவதுடன், நெல்லைக் கொள்வனவுசெய்வதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுதல் அவசியமாகியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உரியநிவாரணத்தை வழங்கவேண்டுமானால், அவர்களுடைய உற்பத்தியை நிர்ணயவிலையில் உத்தரவாதப்படுத்தி கொள்வனவுசெய்யவேண்டும்.

யுத்தம்முடிந்தபிறகு, விவசாய திணைக்களம், விவசாய சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன தமது கட்டடங்களையும் ஏனைய பௌதீகவளங்களையும் இழந்தநிலையிலேயே, இப்போது செயற்பட்டு வருகின்றன. அத்துடன் மனிதவளப்பற்றாக்குறையுடன் இயங்கமுடியாத நிலையில் இவை காணப்படுகின்றன. இதனைச் சீர்செய்வதும் அவசியமாகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை திட்டமிடலிலும் நடைமுறைப்படுத்தலிலும் பாரிய தடைகளை ஏற்படுத்துகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலயங்களில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, தனங்கிழப்புப்பகுதிகளில் மீள்குடியேறிய மக்களின் விவசாயநடவடிக்கைகளும் இவ்வாறு பல உதவிகளையும் தேவைகளையும் வேண்டிநிற்கின்றன. வலிகாமம்வடக்கு தெல்லிப்பளைப்பகுதி மக்களின் விவசாயநடவடிக்கைகளும் அடிப்படைஉதவிகளையும் தேவைகளையும் வேண்டிநிற்கின்றன. அந்தப்பகுதியில் போர்முடிந்த பின்னர் தங்கள் வீடுகளுக்கும் கிராமங்களுக்கும் செல்வதற்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக மேற்கொள்ள வேண்டும். விவசாயத்திற்கு அடிப்படையான நீர்ப்பாசனத்தைப் பொறுத்தவரையில், பாரிய நீர்ப்பாசனகுளங்கள், சிறிய குளங்கள் அனைத்துமே புனரமைப்பை வேண்டியுள்ளன. அத்துடன் நீர்பாயும் வாய்க்கால்களும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், முறிப்புக்குளம், வன்னேரிக்குளம், கரியாலை நாகபடுவான் குளம், கல்மடுக்குளம், பிரமந்தன் ஆற்றுக்குளம் ஆகியகுளங்கள் விரைவாக புனரமைப்புச் செய்யப்பட வேண்டியுள்ளன. குறிப்பாகப் பூநகரிப்பிரசேத்தில், விவசாய நீர்வழங்கலிற்கு அப்பால், குடிநீருக்கானதேவையும் அவசியமாக இருக்கிறது. அங்கே நிலத்தடிநீரை வழங்குவதில் சிறுகுளங்கள் பெறும்பங்காற்றி வருகின்றன.

கால்நடை

இவைதவிர, கிளிநொச்சிமாவட்டத்தின் இன்னொரு முக்கியமான விசயம் கால்நடைவளர்ப்பாகும். மீள் குடியேறிய மக்களின்வாழ்வாதாரத்தில், மிகவும் செல்வாக்குச்செலுத்தும் காரணிகளில் பால்உற்பத்தி, விலங்குவளர்ப்பு என்பன முதன்மையானவையாக இருக்கின்றன. இன்று மக்கள் தமது கால்நடைகளை மீளப் பெற்றுக்கொள்ளவும், அவற்றின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தும் ஏற்பாடுகளையும் மேம்படுத்த உரிய வழிமுறைகளைச் செய்ய வேண்டும் எனக் கால்நடை அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். 30 ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியில் இருந்து தினமும் 12 கொள்கலன்களில் பால் சேகரிக்கப்பட்டு, பொலனறுவையிலிருந்த பால்பதனிடும் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

ஆகவே, மீண்டும் கால்நடைவளர்ப்பை சிறப்பாக மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களையும், மானியங்களையும், கடன் உதவிகளையும் வழங்குவதற்கான நிதிஒதுக்கீடு அவசியமாகிறது.

மீன்பிடி

கிளிநொச்சியைப் பொறுத்தவரை பூநகரிப் பிரதேசத்தில் 1180 மீனவக்குடும்பங்களும், கண்டாவளைப் பிரசேத்தில் 643 மீனவ குடும்பங்களும் மீள்குடியேறியுள்ளன. இந்த மக்கள் தொழில்செய்வதற்காக, 705 சிறிய கண்ணாடி இழைப்படகுகளும், 447 பெரிய படகுகளும், 1013 வெளிஇணைப்பு இயந்திரங்களும், 1148 மீன்பிடிவலைகளும், தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 138 படகுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதித்தேவைளையும் பூர்த்தி செய்யக்கூடிய வழிகளைக் கண்டறிய வேண்டியது அவசியமாகிறது.

பள்ளிக்குடா, நாச்சிக்குடா, வலைப்பாடு ஆகிய இடங்களில் மீன்பிடித்துறை அமைப்பதற்கும்,கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஐஸ் உற்பத்திநிலையங்கள், குளிர்சாதனவாகனங்கள் என்பனவற்றை வழங்கவும் கௌரவ மீன்பிடி நீரியல்வள அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் கிளாலிப்பகுதியில் மக்கள் மீளக்குடியேற வேண்டியுள்ளது. கிளாலியிலுள்ள மீன்பிடித்துறையும் மீளஇயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது. பளைப் பிரதேசசெயலர்பிரிவு மற்றும் தென்மராட்சிப் பகுதிக்கான பிரதான மீன்பிடித்துறை இதுவாகும். எனவே இந்தத்துறை மீண்டும் இயங்குவதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சும் மேற்கொள்ள வேண்டும்.

இதேபோன்று யாழ்மாவட்ட மீனவர்களுக்கு, ஆழ்கடலில் பலநாள்தங்கி தெர்ழில்புரியும் படகுகள், சமாசம் ஒன்றிற்கு 5வீதம், 50படகுகள் தேவைப்படுகின்றன. இதற்கான வேண்டுகைகளை, கௌரவ கடற்தொழில் நீரியல்வள அமைச்சிடம், யாழ் மாவட்டமீனவர்கள் கையளித்துள்ளனர். இதே போன்று, குருநகர், பருத்தித்துறை, இன்பருட்டி, மயிலிட்டி போன்ற இடங்களில் மீன்பிடித்துறை முகங்கள் அமைப்பதற்கான திட்டங்களிற்கும் கடற்றொழில் அமைச்சு இணங்கியுள்ளது. அவற்றை விரைவில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

கல்வி

மீள்குடியேற்றம் நடந்திருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18,278 மாணவர்கள் பாடசாலைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9,100 மாணவர்களுக்கான மேசை, கதிரைகள் மட்டுமே இப்பகுதி பாடசாலைகளில் உள்ளன என்று கல்வித்திணைக்களப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை நிரந்தர கட்டடம் இல்லாமல், தற்காலிக கொட்டகைகளில் இயங்கும் பாடசாலைகள் செம்மண்குன்று, வேராவில், ஞானிமடம், சோரன்பற்று, மாயவன் ஊர், மண்ணித்தலை ஆகிய இடங்களில் உள்ளவையாகும். இந்தப் பாடசாலைகள் மழை வந்தால் இயங்கமுடியாதநிலையில் இருக்கின்றன. பூநகரிப் பிரதேசத்தில் இருக்கும் கரியாலை நாகபடுவான் பாடசாலைக்கு கூரையே இல்லை.

தருமபுரம், அக்கராயன்குளம், பளை, ஜெயபுரம், பகுதி பாடசாலைகள் இயங்குகின்ற போதும், அங்கே அடிப்படை வளங்களே பொதுவாக இல்லை எனலாம். சில சிரமங்களின் மத்தியிலேயே இந்தப் பாடசாலைகளை அதிபர்களும் ஆசிரியர்களும் இயக்கி வருகின்றனர். பெரும்பாலான பாடசாலைகளில் மரங்களுக்குக் கீழேயே வகுப்புகள் நடக்கின்றன. கிளிநொச்சிமாவட்டத்தின் பிரதான பாடசாலையாகிய கிளிநொச்சி மத்தியகல்லூரி தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாமாகவே இருக்கின்றது. இதனால், இந்தக் கல்லூரியின் மாணவர்கள், அருகிலிருக்கும் பிற கட்டிடங்களிலும் தற்காலிகக் கொட்டகைகளிலும் அகதி நிலையிலேயே கற்கின்றனர். எனவே, இந்தப்குதியிலுள்ள நான்குபிரதேச செயலக பிரிவுகளுக்கும் தலா ஒரு பாடசாலை வீதம் தெரிவு செய்யப்பட்டு, அவற்றைத் தரம் உயர்த்த கல்வி அமைச்சு கவனம் எடுக்க வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியில் நாம் புதிய இலக்குகளை எட்டமுடியும்.

தொண்டர் ஆசிரியர் நியமனம்

இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் உள்ளிட்ட, போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக 870 பேர் கடமையாற்றிவருகிறார்கள். இவர்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு மடு கல்வி வலய பாடசாலைகளில் மிக நெருக்கடியான காலங்களில் அர்ப்பணிப்புடன் 870பேர் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியுள்ளமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கான நிரந்தர நியமனத்தினை வழங்க கௌரவ கல்வி அமைச்சு உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனை வேலையற்றபட்டதாரிகளின் பிரச்சினை இன்று யாழ்ப்பாணத்தில் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. மிக நீண்ட காலமாக, குறிப்பாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக பலர்வேலை ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நம்பிக்கையினமும் விரக்தியும் நிரம்பிய இவர்களின் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகிறது.

மருத்துவம்

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கான மருத்துவத் “தேவைகள், மருத்துவர்களின் தேவைகள் கடந்தகாலங்களில் இந்த மன்றில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இப்பொழுது, இந்தமாவட்டங்களுக்கு மருத்துவர்கள் உட்பட 250 மருத்துவப்பணியாளரர்கள் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது, ஆனாலும் வைத்தியசாலைகளிலும், சுகாதார வைத்தியஅதிகாரிகள் பணிமனையிலும், நோய் வராதுகாக்கும் சுகாதாரப்பணிகளிலும், சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றுவோருக்கு நியமனம் வழங்கி, பற்றாக்குறைநிலவும் சுகாதாரப்பணி வெற்றிடங்களை நிரப்பவேண்டுமென, சுகாதார அமைச்சைக் கேட்டுக்கொள்கிறேன்.

நிவாரண நீடிப்பு

மீள்குடியேறியமக்கள், தமது சுயஉழைப்பில் தங்கிநிற்கும்நிலை ஏற்படும் வரையில், அவர்களுக்கான உலர்உணவு நிவாரணத்தை, மேலும் ஆறுமாதங்களிற்கு நீடிக்கவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கின்றனர். எனவே, அவர்களுடைய நிர்க்கதியான நிலையைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குரிய உலர்உணவு நிவாரணம் மேலும் 6மாதங்களிற்கு நீடிக்க படவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கான தொழில் வாய்ப்புகள் உதவித்திட்டங்கள் போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் தனியாகவும் குடும்பமாகவும் உள்ளனர். இவர்களுடைய பாதிப்பு சமூகத்தின் பாதிப்பாகவும் இருக்கின்றது.

யுத்தத்தின்போது பலர் காணாமற் போயுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறியமுடியாமல் உறவினர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். இதேவேளை புலிகளால் கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் உட்பட முன்னாள் உறுப்பினர்களின் விடுதலை தொடர்பாகவும் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும் என இந்தச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கேட்கின்றேன்.

தினமும் கண்ணீருடன் இவர்களுடைய உறவினரும் பிள்ளைகளும் கிராமங்களில் அலைந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய துயரத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாடு அமைதிக்கும் இயல்புநிலைக்கும் திரும்பியுள்ளது என்பதை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் உணர வேண்டும். அதுதான் அரசாங்கத்தின் வெற்றியாகும். இந்தத் தீவில், முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மக்கள்கூட்டத்தின் மீது நமது கவனமும் கரிசனையும் பதியவேண்டிய தருணம் இதுவாகும். எனவே அந்த மக்களின் சார்பாக இந்த விடயத்தை இந்தமன்றில் கவனப்படுத்த விழைகின்றேன்.

ஆகவே, நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதையே மீண்டும் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். போர் முடிந்தபிறகு சமர்ப்பிக்கப்படும் இந்த வரவு செலவுத்திட்டம், அபிவிருத்திக்கும் மீளமைப்புக்குமான ஒருதிட்டமாக கொள்ளப்படுவதற்கான அடிப்படைகளை இந்த மன்று ஏற்படுத்தி அங்கீகரிக்கவேண்டும் எனக்கேட்டு என்னால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி விடயங்களை மன்றிடம் கையளிக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக