8 ஜூன், 2010

யுத்தக்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுவது குறித்து தகவல்களை வெளியிடுவாரானால் துரோகி என்று குற்றம் சுமத்தி அவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்படு



யுத்தகுற்றச்செயல்விசாரணையில்ஒத்துழைத்தால்முன்னாள்தளபதியைதூக்கிலிட முடியும்:கோத்தபாய இலங்கையில் ஒரு வருடத்திற்கு முன்னர் முடிவடைந்த சிவில் யுத்தத்தின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னாள் இராணுவத் தளபதி ஒத்துழைப்பு வழங்கினால் அவர் தூக்கிலிடப்படுவார் என்று நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார் என்று ஏ.எப்.பி.செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



"வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் தற்போது இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஜெனரல் சரத் பொன்சேகா, யுத்தக்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுவது குறித்து தகவல்களை வெளியிடுவாரானால் துரோகி என்று குற்றம் சுமத்தி அவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் கோத்தபாய ஆகியோருக்கும் பொன்சேகாவுக்குமிடையே பிளவு ஏற்பட்டது.

அரசாங்க படைகளின் கை ஓங்கி நீண்ட தசாப்த காலமாக நடைபெற்று வந்த சிவில் யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்த, கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற சண்டையில் 7,000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மதிப்பிட்டிருந்தது.

இந்தவார இறுதியில் ஒலிபரப்புவதற்காக கோதபாய பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியவற்றை லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டிருந்தது.

பிபிசியில் பேட்டியை நடத்திய செய்தியாளர் ஸ்டீபன் சக்கூர் இணைந்து தயாரித்த மேற்படி பத்திரிகைச் செய்தியில், யுத்தக் குற்றச்செயல் பற்றிய சர்வதேச விசாரணை ஒன்றில் சாட்சியமளிக்கும் பொன்சேகாவின் எதிர்காலம் குறித்து கோத்தபாய பதிலளித்த போது அவர் ஆத்திரத்துடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அவரால் அவ்வாறு சாட்சியமளிக்க முடியாது. அவரே அப்போது தளபதியாக இருந்தார்" என்று கோத்தபாய கூறினார்.

அப்படி சாட்சியமளிப்பது தேசத்துரோகமாகும் என்றும் கூறினார்.

"நான் கேட்கிறேன். எவ்வாறு அவரால் நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியும்? அவர் ஒரு பொய்யன். நவம்பர் மாதம் இராணுவத்திலிருந்து வெளியேறிய பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக் கொண்டார்.

அதனையடுத்து அரசியலில் இரட்டை வேடம் போட்டமை, சீருடை தரித்திருந்த போது ஊழல்களில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இராணுவ படைகளின் நடத்தை குறித்து எந்தவொரு சர்வதேச விசாரணைகளையும் அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று ஜனாதிபதி அடிக்கடி தெரிவித்து வந்ததை கோத்தபாயவும் தற்போது குறிப்பிட்டார்.

இலங்கை ஒரு சுதந்திர நாடு. இவற்றை எல்லாம் விசாரணை செய்யும் ஆற்றல் எமக்கு உண்டு என்று கோத்தபாய கூறினார்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொன்சேகா விசாரணை ஒன்றை நடத்துமாறு கோரியதுடன் தாம் அதற்கு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உச்ச மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை எவரையும் நான் காப்பாற்ற மாட்டேன் என்று பொன்சேகா கடந்த மாதம் சூளுரைத்திருந்தார்.

யுத்தத்தின் போது சரணடையச் சென்ற விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொல்லுமாறு ஜனாதிபதியின் சகோதரர் உத்தரவிட்டதாக பொன்சேகா குற்றம்சாட்டினார். கோத்தபாய இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக நிராகரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக