26 ஜூன், 2010

பான் கீ மூனினால் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிற்கு தாம் ஆதரவளிப்போம்- நோர்வே

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிற்கு தாம் ஆதரவளிப்பதாக நோர்வேயின் சுற்றாடல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய எரிக்,

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், குமரன் பத்மநாதன் மற்றும் புலித்தேவன் போன்ற முக்கிய தலைவர்களுடன் நோர்வே தொடர்புகளைப் பேணி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளைக் கொடிகளை அசைப்பதன் மூலம் மட்டுமே சரணடைய முடியும் என அறிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரணடைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் யார் யார் பங்கு பற்றினார்கள் என்பது தொடர்பில் அவர் தகவல்களை எதனையும் வெளியிடவில்லை.

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி வரையிலும் சரணடைவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட கால யுத்தத்தை எதிர்நோக்கிய இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வன்முறைகள் வெடிப்பதற்கு இடமளிக்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கி வந்ததாக முன்னாள் விடுதலைப் புலி கட்டளைத் தளபதியும், பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எரிக் சொல்ஹெய்மிற்கும் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளர்ர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சொல்ஹெய்ம் திட்ட வட்டமாக மறுத்துள்ளார். நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக