14 ஜூன், 2010

நிகோபார் தீவு அருகில் நள்ளிரவில் புகம்பம் இலங்கை, இந்தியா உட்பட 6 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை; கரையோரங்களில் பதற்றம்; மக்கள் அலறியடித்து ஓட்டம்


திருகோணமலையிலிருந்து ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் கிழக்கு புறமாக நிக்கோபார் தீவுகளுக்கருகில் கடலில் நேற்று அதிகாலையில் பூகம்பம் ஏற்பட் டதாக இலங்கை வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் நந்தலால் பீரிஸ் தெரிவித்தார்.

இந்த பூகம்பம் நிக்கோபார் தீவுகளிலிருந்து 164 கிலோ மீட்டர் தூரத்தில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் கடலுக்கடியில் இலங்கை நேரப்படி நள்ளிரவுக்கு சற்று பின்னர் 1.05 மணிக்கு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இப்பூகம்பம் 7.5 ரிச்டர் அளவில் பதி வானது. இதனையடுத்து அதிகாலை 1.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு சுனாமி முன்னெச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிக்கோபார் தீவுகளுக்கருகில் பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் அனுராதபுரம், பதுளை, பண்டாரவளை, கொழும்பு, காலி, பொத்துவில் போன்ற இடங்களில் நில அதிர்வு உணர்வு உணரப் பட்டுள்ளது. சில இடங்களில் பொருட்கள் ஓரிரு வினாடிகள் குலுங்கியதாகவும் உயரத்திலிருந்த ஓரிரு பொருட்கள் உருண்டு கீழே விழுந்ததாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார்.

இப்பூகம்பத்தையடுத்து வானிலை அவதான நிலையம் விடுத்த சுனாமி முன்னெச்சரிக்கை குறுந் தகவலாக கையடக்கத் தொலைபேசிகளில் முதலில் வெளியாகின. அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் உட்பட முழு நாட்டி லும் கரையோரப் பிரதேசங்களில் அமைக் கப்பட்டிருக்கும் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் ஊடாகவும், மத வழிபாட்டுத் தலங்களின் ஒலிபெருக்கிகள் ஊடாகவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் உட்பட சகல கரையோரப் பிரதேசங்களிலும் அல்லோலகல்லோல நிலைமை ஏற்பட்டது. ஆழ்ந்த தூக் கத்திலிருந்த மக்கள் விழுந்தடித்துக்கொண்டு எழுந்து செய்வதறியாது சில நிமிடங்கள் திகைத்து நின்றனர்.

சொற்ப வினாடிகளில் கைகளுக்கு கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக உயரமான பாதுகாப்பு

இடங்களை நோக்கி மக்கள் வெளியே றினர். இதன் விளைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள கரையோர நகரங்களிலும், முச்சந்திகளிலும் பெரும் சனநெரிசல் ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. எங்கும் பதற்ற நிலைமை சூழ்ந்திருந்தது.

இவ்வாறான நிலையில் இலங்கை வானிலை அவதான நிலையம் அதிகாலை 2.45 மணியளவில் சுனாமி முன்னெ ச்சரிக்கையை மீளப் பெற்றதாகவும் வானி லையாளர் நந்தலால் பீரிஸ் கூறினார்.

இருப்பினும் பதற்றமடைந்திருந்த மக்கள் உடனடியாக வழமை நிலைக்குத் திரும்பவுமில்லை. தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பவுமில்லை. ஓரிரு மணித்தியாலங்களின் பின்னரே மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பியதாக பிரதேசவாசிகள் கூறினர்.

இப்பூகம்பம் ஏற்பட்ட இடத்திலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் நேற்று பிற்பகல் 3.00 மணிவரையும் பத்து சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அவை அனைத்தும் 5 ரிச்டர் அளவுக்கு குறைவாகவே பதிவாகின. இந்த அதிர்வுகள் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இப்பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியா, இந்தோனேசியா, மியன்மார், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் உடனடியாக சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்களும் அல்லோலகல்லோலப்பட்டனர்.

இருப்பினும் அந்த நாடுகளும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் சுனாமி முன்னெச்சரிக்கையை வாபஸ் பெற்றுக் கொண்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக