20 மே, 2010

வடக்கை அரசு முன்னேற்றும் என்பது எமது எதிர்பார்ப்பு : ஐதேக எம்பி சுவாமிநாதன்

40 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி உள்ளனர். அவற்றை நிவர்த்தி செய்வது எமது கடப்பாடாகும். அரசியல் வேற்றுமைகள் இன்றி, அனைவரும் எம் மக்கள் என்ற வகையில் தமிழ்ச் சமூதாயத்தை ஒன்றிணைந்து முன்னேற்ற வேண்டும். இதனை அரசாங்கம் ஏற்று வடபகுதியை அரசு முன்னேற்றும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக இன்று ஐதேக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியளாலர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கல்வி மேம்பாடு

"வடபகுதியில் 62,944 உள்நாட்டு இடம்பெயர் மக்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் உடனடியான தீர்வினை வழங்க வேண்டும். வடபகுதியில் உள்ள கல்வி வலயங்களான கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு , வவுனியா வடக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளில் 300 கல்விக் கூடங்கள் இருந்தன. தற்போது 194 கல்விக்கூடங்களே இயங்குகின்றன.

86,000 மாணவர்களில் 26,000 பேரே கல்வி கற்கின்றார்கள். ஏனையோருக்குக் கற்கும் வாய்ப்புகள் இல்லை.

புலம் பெயர்ந்தோர் உதவி

இடம்பெயர் மக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் பொருளாதார ரீதியாக உதவ முன் வந்துள்ளனர். இத்தகையோரை அரசாங்கம் நம் நாட்டுக்கு அழைக்க வேண்டும்.

காணி அத்தாட்சி

போரினால் மக்கள் தமது காணி அத்தாட்சி பத்திரங்களை இழந்துள்ளனர். இதற்கு மாற்றீடான ஒருவழியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்" என்றார்.

யுத்தத்தை நிறைவு செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே வேகத்தைப் பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்தியில் காட்டவில்லை. இதனால் கடந்தகாலத்தை நோக்கி மக்களை இட்டுச் செல்வதாகவே அரசின் நடவடிக்கை அமைகிறது என்றவாறு அண்மையில் ஜேவிபி கருத்தினை முன்வைத்திருந்தது.

யுத்தம் நிறைவடைந்து ஒரு வருட காலத்தின் பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் உங்களது கருத்து என்ன என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கையில்,

"முற்போக்கான வழியில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க அ ரசாங்கம் முற்படுதிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அரசாங்கம் தமிழர் பிரச்சினைக்கு உடனடி தீர்வினை முன்வைக்க வேண்டும். காலந்தாழ்த்தினால், மீண்டும் பிரச்சினை உருவாக வழியேற்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக