21 மே, 2010

இன்னும் 40 ஆண்டுகளில் சீனாவுக்கு புது பிரச்னை


பீஜிங்:"சீனாவில் வரும் 2050ம் ஆண்டில், 35 கோடி ஓய்வூதியதாரர்கள் இருப்பர். அதாவது நான்கு பேரில் ஒருவர், 65 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார்' என, ஆய்வு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.சீன மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜியாங் வீபிங் கூறியதாவது:சீனாவில் தற்போது, 133 கோடி மக்கள் உள்ளனர். ஆனாலும், 2050ம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை 150 கோடியைத் தாண்டாது. அதற்கு காரணம், "ஒரு குடும்பம் ஒரு குழந்தை' கொள்கையை சீனா தீவிரமாக பின்பற்றி வருவதே.அதே நேரத்தில், 2050ம் ஆண்டில் 35 கோடி ஓய்வூதியதாரர்கள் இருப்பர். நான்கு சீனர்களில் ஒருவர், 65 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார். அந்த நேரத்தில், உலக மக்கள் தொகையில் சீனாவின் பங்கு 15 சதவீதமாக இருக்கும். சீனாவில் தற்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 18 கோடி பேர் உள்ளனர்.இவ்வாறு ஜியாங் வீபிங் கூறினார்.

இதற்கிடையில், சீனாவின் ரென்மின் பல்கலைக் கழக பேராசிரியர் வூ கேங்பிங் கூறுகையில், ""குழந்தை பிறப்பு குறைந்து, வயதானோர் எண்ணிக்கை அதிகரித்தால், உற்பத்தி குறையும். மருத்துவ செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும்,'' எனக் கூறியுள்ளார்.ஜியாங் வீபிங் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கூறுகையில், ""சீனாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படாது. 2015ம் ஆண்டில், தொழிலாளர்கள் எண்ணிக்கை 100 கோடியாக இருக்கும். அதன்பின் 2050ம் ஆண்டு வரை 85 கோடியாக தொடரும்,'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக