21 மே, 2010

வடக்கு, கிழக்கு மாகாணம்: உள்ளூராட்சி சபை அபிவிருத்தி, வீதி புனரமைப்புக்கு 109.2 மில். டொலர்


வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 65 உள்ளூராட்சி சபைகளையும் துரித அபிவிருத்தி செய்யவும் அப்பகுதியிலுள்ள வீதிகளை புனரமைக்கவும் 109.2 மில்லியன் டொலரை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான இலகு கடனை ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலக வங்கியும் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இதன்படி உள்ளூராட்சி சபை மட்ட த்திலுள்ள கிராமங்கள் துரிதமாக அபிவி ருத்தி செய்யப்படும். 65 உள்ளூராட்சி சபைகளையும் அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் டொலரை வட்டியில்லா கடனாக வழங்க உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள வீதிகள் புனரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார். இதன்படி மாங்குளத்தில் இருந்து வெள்ளங்குளம் வரையான 38 கிலோ மீட்டர் வீதியும் பரந்தனில் இருந்து பூநகரி வரையிலான 25.3 கிலோ மீட்டர் வீதியும் 33.7 மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்படும்.

இது தவிர தம்புள்ளையில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையான 70 கிலோ மீட்டர் தூர வீதியையும் கந்தளையிலிருந்து திருகோணமலை வரையான 43 கிலோ மீட்டர் தூர வீதியையும் புனரமைக்க உலக வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொல ர்களை கடனாக வழங்க உள்ளது. இந்த திட்டத்தை கையளிக்க ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக