19 ஏப்ரல், 2010

மெராக் துறைமுகத்தில் கப்பலில் இருந்து அகதிகள் வெளியேற்றம்

இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் கப்பலில் இருந்த 120 இலங்கை அகதிகள் பஸ்களில் ஏற்றப்பட்டு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக படகில் செல்ல முற்பட்ட சமயம் கரையோர கண்காணிப்பாளர்களால் இவர்கள் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவுஸ்திரேலியாவுக்கான தமது அகதி அந்தஸ்து வழங்கப்படும் வரை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கப்பலில் இருந்து இறங்க மறுத்த இவர்கள் தற்போது கப்பலில் இருந்து இறங்க இணக்கம் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று திங்கட்கிழமை 120 இலங்கை அகதிகள் கப்பலில் இருந்து இறங்கி பஸ்களில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

"நான் எங்கு கொண்டு செல்லப்படுகின்றேன் என எனக்குத் தெரியாது.ஆனால் இவ்விடத்தை விட்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என கப்பலில் இருந்து இறங்கிய ராஜூ(வயது 26) ஏ.எப்.பி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருவோரின் தொகை அதிகரித்ததால் தற்காலிகமாக அகதி அந்தஸ்து வழங்கும் பணிகளை நிறுத்துவதாக அவுஸ்திரேலியா அறிவித்திருந்தது.

தனக்கு தற்போதும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல விருப்பம் எனினும் அது சாத்தியமில்லை என லத்தீப் (வயது 21) தெரிவித்துள்ளார்.

"கடந்த ஆறு மாதங்களாக கப்பலில் இருந்துள்ளேன்.எனக்கு இனிமேல் அங்கிருக்க விருப்பமில்லை.இங்கு வாழ்க்கை மிகவும் கடினமானது.மக்கள் சுகவீனம் அடைகின்றனர்.எனக்கு அவுஸ்திரேலியா செல்ல விருப்பம்.எனினும் எனக்குத் தெரியது அது சாத்தியம் இல்லை என.அமெரிக்கா அல்லது நியுசிலாந்துக்கு செல்ல எனக்கு விருப்பம்.இந்தோனேஷியாவில் இருக்க விருப்பமில்லை.இங்கு வேலை தேடுவது மிகக் கடினம்.அத்துடன் இலங்கைக்கு திரும்பிச் செல்லவும் எனக்கு விருப்பமில்லை.அங்கு எனக்கு ஒன்றும் இல்லை.வீடு கூட இல்லை"என லத்தீப் தெரிவித்துள்ளார்.

கப்பலில் இருந்து இறக்கப்பட்ட இவ் இலங்கையர்கள் சிங்கப்பூரிற்கு அருகிலுள்ள பிண்டான் தீவிலுள்ள அவுஸ்திரேலியா நிதியுதவியளிக்கும் ரன்யுங் பினாங் தடுப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.அங்கு ஐ.நா அகதிகளுக்கான முகவர்கள் இவர்களுக்கான அகதி அந்தஸ்து குறித்து மதிப்பீட்டு செய்வர் என ஏ.எப்.பி தெரிவித்துள்ளது.

"கப்பலில் இருந்த அகதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது மிகக் கடினமாக இருந்தது எனினும் எமது மனிதாபிமான அணுகு முறையால் அவர்கள் இறுதியில் சம்மதித்தனர்.இவர்களுக்கு உதவ முன்வரும் நாடுகள் விரைவில் முன்வந்து உதவ வேண்டும்" என வெளிவிவகார அமைச்சின் அதிகாரி சுஜாட்மிகோ ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக