19 ஏப்ரல், 2010

ஜெனரல் சரத் மீதான இரண்டாவது விசாரணை நாளை தொடரும்



ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் மீண்டும் நாளை தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை கடந்த 6 ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் இன்று வரை அதன் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதன் போது இன்றைய தினத்திற்கான விசாரணைகள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சி நாளை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பாக முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அன்றைய தினம் அவருக்கெதிராக 3 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன.

நாடாளுமன்றம் செல்ல அனுமதி?

ஏழாவது நாடாளுமன்ற அமர்வின் போது ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்றம் செல்ல ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுமதி வழங்கப்படுவது சந்தேகமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கக் கோரும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் விண்ணப்பம் இதுவரை இராணுவத்திற்குக் கிடைக்கவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவ ஊடகப்பேச்சாளர் வழங்கிய பதிலின் அடிப்படையில், கருத்துரைத்த நாடாளுமன்ற பதில் செயலாளர் தம்மிக்க கிதுல்கொட, சரத்பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு வருகை தருவது குறித்து நாடாளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய தாம் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

சரத் பொன்சேகா பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக தேசிய முன்னணியினரிடம் இருந்து இதுவரை தமக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும்; கிடைக்கவில்லை என பதில் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

தாம் கடந்த வெள்ளிக்கிழமை இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும், இராணுவத் தளபதி ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக