29 ஏப்ரல், 2010

போலீஸ் வலையில் நடிகை ரஞ்சிதா : 2 நாளில் நேரில் ஆஜராவதாக உறுதி





பெங்களூரு : நித்யானந்தாவிடம் நடத்திய விசாரணையில், நடிகை ரஞ்சிதா இருக்குமிடத்தை, கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் கண்டுபிடித்தனர். 'இரண்டு நாட்களில் நடிகை ரஞ்சிதா விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என்று அவருக்கு கர்நாடகா போலீசார், 'கெடு' விதித்துள்ளனர்.

சாமியார் நித்யானந்தாவுடன் வீடியோ காட்சிகளில் நெருக்கமாக இருந்த நடிகை ரஞ்சிதா, தலைமறைவானார். ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அடிக்கடி தங்கும் இடத்தை மாற்றிக் கொண்டிருந்தார். கேரளாவில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. போலீசில் நித்யானந்தா சிக்கியவுடன், நடிகை ரஞ்சிதா குறித்து பலமுறை அவரிடம் விசாரித்தனர். முதலில் பதில் கூற மறுத்த நித்யானந்தா, பின்னர், ரஞ்சிதா இருக்கும் இடத்தைக் கூறினார். ரஞ்சிதாவின் மொபைல் நம்பரில், முதலில் நித்யானந்தாவை போலீசார் பேச வைத்தனர். அதன் பின்னர், கர்நாடகா சி.ஐ.டி., போலீஸ் தரப்பில் நடிகை ரஞ்சிதாவிடம் பேசப்பட்டது. அப்போது ரஞ்சிதா, 'இன்னும் இரண்டு நாளில், நானே நேரடியாக விசாரணைக்கு வருகிறேன்' என்று கூறியதாகத் தெரிகிறது.

இது குறித்து கர்நாடக சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., யோகப்பா கூறுகையில், ''நடிகை ரஞ்சிதா இருக்கும் இடம் தெரிந்துள்ளது. நித்யானந்தா மூலம், அவர் இருக்கும் இடத்தை அறிந்தோம். ரஞ்சிதாவிடம் பேசும் போது, இரண்டு நாட்களில் அவர் விசாரணைக்கு வராவிட்டால், அவர் இருக்கும் இடத்திற்கு போலீசார் நேரில் சென்று, அவரை கைது செய்து, திறந்த ஜீப்பில் அழைத்துவருவோம். இந்த வழக்கில் அவர், ஒரு சாட்சி மட்டுமே,'' என்றார். இந்த தகவல்களை வெளியிட்ட எஸ்.பி., யோகப்பா, நடிகை ரஞ்சிதா இருக்கும் இடத்தை தெரிவிக்கவில்லை. நித்யானந்தா சம்பந்தமான விசாரணைக்கு ஒத்துழைப் பதாக நடிகை ரஞ்சிதா கூறியதாகத் தெரிகிறது. நித்யானந்தாவிடம் சி.ஐ.டி., போலீசார் கேட்ட கேள்விகளுக்குரிய பதிலை வைத்து, நடிகை ரஞ்சிதாவிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சாமியார் கூறிய பதிலுக்கும், ரஞ்சிதா தெரிவிக்கும் பதிலுக்கும் தொடர்பு உள்ளதா என்று அறிய திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இரண்டு நாள் போலீஸ் காவல்: நித்யானந்தாவிடம் நடத்திய விசாரணை முடிவடையாததால், அவரை மேலும் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, ராம்நகர் நீதிமன்றம் அனுமதியளித்தது. நித்யானந்தாவிடம் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், பல புதிய தகவல்கள் கிடைத்து உள்ளன. நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த இரண்டு நாள் அனுமதி கிடைத்ததில், ஒரு நாள் மருத்துவமனையிலேயே கழிந்து விட்டதால், நேற்று சில மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதில் தான் போலீசார் ஆர்வம் காட்டினர். நேற்று மதியம் 3 மணியளவில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நித்யானந்தா, ராம்நகர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப் பட்டார்.

சி.ஐ.டி., போலீஸ் தரப்பில், 'சாமியார் நித்யானந்தாவிடம் விசாரணை முடியவில்லை. மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, ஆறு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்' என்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயண பிரசாத், நித்யானந்தாவை மேலும் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார். வரும் 30ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். நித்யானந்தா குறித்த தகவல்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்திய அவருடைய சீடர் லெனினிடம், கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் சில நாட்களாக விசாரணை மேற் கொண்டனர். நித்யானந்தாவின் ரகசிய ஒப்பந்தங்கள், அந்தரங்க நடவடிக்கைகள், வெளிநாட்டு பணம் சம்பாதிப்பு, நித்யானந்தா மடத்தின் கிளைகள், அவற்றின் நடவடிக்கைகள் உட்பட முக்கிய தஸ்தா வேஜுகள், சில 'சிடி'க்களை யும் லெனின் அளித்துள்ளதாக தெரிகிறது. நித்யானந்தா எப்போதும் தனது கையில் ருத்ராட்ச மாலை வைத்திருப்பார். இந்த மாலையை தற்போது கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் வாங்கி வைத்து உள்ளதாக நித்யானந்தாவின் வக்கீல் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக