24 மார்ச், 2010

இலங்கையர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச்சென்ற கப்பல் தலைவருக்கு அபராதம் விதிப்பு

இலங்கையிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேசியா வழியாக 254அகதிகளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் கப்பல் தலைவர் இன்று இந்தோனேசிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்போது 3ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. அத்துடன் 18மாதங்கள் நன்னடத்தைக் காலமாகவும் அறிவிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் அவர் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் அதேநேரம் நன்னடத்தை மாதங்களுக்குள் அவர் மீண்டும் தவறிழைத்தால் ஒருவருட சிறைத்தண்டனை வழங்கப்படுமென நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 2007ம் ஆண்டு இதே குற்றத்தின்கீழ் அவர் 20மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார். இந்நிலையில் கடந்தவருடமே அவர் விடுதலையாகியிருந்தார். இந்தோனேசிய சட்டத்தில் ஆட்கடத்தலுக்கு கூடிய தண்டனை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை வெளியான தகவல்படி குறித்தநபர் கடந்த 10ஆண்டுகளுள் 1500பேரை அவுஸ்திரேலியாவுக்குள் கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. ஆப்ரகாம் லூகனாபேசி என்ற பெயருடைய இந்தக் கப்பல் தலைவரால் அழைத்துச்செல்லப்பட்ட 250இலங்கை அகதிகளும் இந்தோனேசிய மெரக் துறைமுகத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக