24 மார்ச், 2010

தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்




எதிர்வரும் ஏப்ரல் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகிறது. நளையும் நாளை மறுதினமும் நடைபெறும் இந்த வாக்களிப்பைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி ஒன்றில் இடம்பெறும் வாக்களிபபைப் போலவே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பு நடைபெறும் சகல அரச அலுவலகங்களும் நாளை 25 ஆம் திகதியும், 26 ஆம் திகதியும் தேர்தல் வாக்குச் சாவடிகள் போன்று இயங்கும் எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தெரிவத்தாட்சி அலுவலராக செயற்படும் திணைக்களத் தலைவர் மற்றும் அவரது செயலணியினர், வாக்களிக்க தகுதி பெற்றவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தவிர வேறு எவரும் வாக்களிப்பு நிலையத்தினுள் இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

எனினும் தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடும் பெப்ரல் அமைப்பின் பிரதிநிதி ஒருவர், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் (சீ. எம். ஈ. வீ) பிரதிநிதி ஒருவர் மற்றும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி சுயேச்சைக் குழு சார்பில் தலா இருவருக்குமே வாக்களிப்பு நிலையத்தில் கண்காணிப்புக்காக அனுமதி வழங்கப்படும். தேர்தல் கண்காணிப்பில் தெரிவத்தாட்சி அலுவலரால் பெயர் குறிப்பிடும் நபர் ஒருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளாக இயங்கும் அரச அலுவலகத்தினுள் வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நேரங்களில் வந்து செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும். வேறு எந்த அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கோ அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கோ தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கோ வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இது தொடர்பாக தபால் மூல வாக்குப் பதிவுகள் நடைபெறும் அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வாக்கெடுப்பு நிலையங்களாக செயற்படும் இடத்திற்கு வெளியில் அல்லது உள்ளே அரசியல் கட்சியின் சுயேச்சைக் குழுவின் சுரொட்டிகள், 'கட்அவுட்' கள், கொடிகள் என எந்தவிதமான பிரசார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது. இவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கவும் அனுமதி இல்லை.

வாக்களிப்பு நிலையத்தில்....

வாக்களிப்பு நிலையத்தினுள் வேட்பாளரின் அல்லது அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருக்குமானால் அவை நீக்கப்பட வேண்டும். அல்லது மறைக்கப்பட வேண்டும்.

வாக்களிப்பு நடைபெறும் இடத்திற்கு கையடக்கத் தொலைபேசிகள், ஆயுதங்கள், கெமராக்கள் கொண்டு செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பு நடைபெறுவதைப் புகைப்படம் எடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் தனது வாக்கை மிக இரகசியமாகப் பதிவு செய்வதற்கான வசதிகளும் வாக்குச் சாவடியில் செய்து கொடுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சகல தெரிவத்தாட்சி அலுவலர்களாக செயற்படும் திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வாக்காளர் வாக்குப் பதிவை முடித்த பின்னர் கவனமாக மடித்து தெரிவத்தாட்சி அலுவலர் முன்னிலையில் உறையினுள் இடவேண்டும். உறையைச் சீல் செய்து, அதனை அதற்குரிய ஆவணத்துடன் மற்றுமொரு உறையினுள் இட்டு, அன்றைய தினமே காப்புறுதி செய்யப்பட்ட தபாலில் தேர்தல் ஆணையாளருக்குக் கிடைக்கும் விதத்தில் தபால் திணைக்களத்திடம் தெரிவத்தாட்சி அலுவலர் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் தனது அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டைக் காண்பிப்பது குற்றம்

பதிவு செய்த வாக்குச் சீட்டை வாக்காளர் பிறருக்குக் காண்பிப்பதோ காண்பிக்கும்படி கூறுவதோ பாரதூரமான தவறு என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டைகள்

வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் எதையேனும் வாக்கெடுப்பு நிலைய அலுவலர்களுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

அந்த அடையாள அட்டைகளுள் ஒன்றேனும் வாக்காளர்களிடம் இல்லாவிட்டால் அல்லது கைவசமிருக்கும் அடையாள அட்டை தெளிவில்லாது இருக்குமாயின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டையொன்றை உடனடியாகப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

வேறு எந்தவிதமான அடையாள அட்டையோ ஆவணமொன்றோ வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

ஆட் பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான வெளிநாட்டுக் கடவூச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட் பதிவுத் திணைக்களத்தினால் வணக்கத்துக்குரியவர்களுக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினாலும் ஆட் பதிவூத் திணைக்களத்தினாலும் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ,தேர்தல்கள் திணைக்களத்தினால் நாடாளுமன்றத் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை, கடந்த மாகாண சபைத் தேர்தல்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும். எனினும் கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைத் தேர்தல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலுக்காக 2008 ஆம் ஆண்டில் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை இந்தத் தேர்தலின் போது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக