24 மார்ச், 2010

பங்களாதேஷ் இராணுவத் தூதுக்குழு இலங்கை வருகை




பங்களாதேஷ் இராணுவ தூதுக்குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய இக்குழு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை இராணுவம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள நிலையில், இது தொடர்பாக இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.

பங்களாதேஷைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முஹம்மட் இஹ்திஸாம் உல் ஹக் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக் ஆகியோர் வன்னி இராணுவ நடவடிக்கைகள் பற்றி விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர்.

சந்திப்பின் முடிவில் பங்களாதேஷ் இராணுவ குழுவினர் இலங்கை இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினர். இதன்போது இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரும் உடன் இருந்தார்.

இராணுவத் தளபதியுடனான சந்திப்பை அடுத்து, இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவையும் சந்தித்து இக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தியத்தலாவ இராணுவ அகடமி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு மற்றும் வன்னி பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக