19 மார்ச், 2010

பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டது முட்டாள்தனமானது: ராஜபக்ஷே






இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட முடிவுசெய்தது முட்டாள்தனமானது என அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

பணியில் இருக்கும்போது அரசியலில் ஈடுபட்டது, ராணுவ விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக பொன்சேகா மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக ராஜபக்ஷே சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

பொன்சேகா ஒரு முட்டாள். 2009 நவம்பர் 16-ம் தேதி கொழும்புவில் அதிபர் அலுவலகத்தில் பொன்சேகா அமர்ந்திருந்தபோது அவரிடம் அதிபர் தேர்தலில் போட்டியிட அவருக்கு விருப்பமா எனக் கேட்டேன். எனினும் அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என பொன்சேகா தெரிவித்தார். கடைசியாக அவர் என்னைச் சந்தித்தபோதுகூட இதுபற்றி என்னிடம் கூறவில்லை.

அரசியல் என்பது ராணுவம் அல்ல. ராணுவத்தில் நீங்கள் உத்தரவிட்டால் அதை மற்ற வீரர்கள் பின்பற்றுவார்கள். ஆனால் அரசியலில் நீங்கள் உத்தரவிட்டால் விளைவுகள் வேறுவிதமாக இருக்கும் என அவரிடம் எடுத்துக் கூறினேன்.

இந்த அரசியல் விளையாட்டு எனக்குத் தெரியும். என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் நான்தான் வெற்றிபெறப் போகிறேன் என்பதையும் அவரிடம் தெரிவித்தேன்.

அவரைத் தேர்தலில் போட்டியிட விடாமல் செய்திருக்கலாம். நான் அனுமதிக்காதவரை அவர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற முடியாது. வேட்புமனுத் தாக்கல் முடியும்வரை அவரது ஓய்வுபெறும் கோரிக்கையை நான் தள்ளி வைத்திருக்கலாம். நான் பயந்துவிட்டேன் என மக்களால் சொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே அவரை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதித்தேன்.

விடுதலைப்புலிகளுடான போரின் இறுதி நாள்களில் பொன்சேகா சீனாவில் விடுமுறையில் இருந்தார்.

அவரை முன்கூட்டியே மன்னிக்கும் திட்டம் எதுவும் இல்லை. நான் அவரை மன்னித்தால் ராணுவக் கட்டுப்பாடு என்னாவது?. இது பிரிட்டிஷ் சட்ட விதிமுறை. நான் என்ன செய்ய முடியும். இந்தியாவிலும், இலங்கையிலும் பிரிட்டிஷ் சட்டவிதிமுறைதான் உள்ளது.

ராணுவ நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான இலங்கை வீரர்களை பொன்சேகா அவராகவே கொண்டுபோய் நிறுத்தினார். ஒருகட்டத்தில் அதன் எண்ணிக்கை 8500 ஆனது. இதற்காக அவரைக் கடிந்துகொண்டு அந்த வீரர்களை விடுதலை செய்தேன்.

இந்தியாவின் அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 200000-ல் இருந்து 450000 ஆக உயர்த்த வேண்டும் என பொன்சேகா விரும்பினார். இந்தியாவிடம் 1.5 மில்லியன் தரைப்படை வீரர்கள் உள்ளனர். இதுதவிர 1 மில்லியன் துணை ராணுவப் படையினர் உள்ளனர். எனவே 2.5 மில்லியன் வீரர்களுக்கு முன் 450 000 வீரர்கள் என்ன செய்ய முடியும். எனவே வெளிநாடு குறித்த கவலையை என்னிடம் விட்டுவிடுங்கள் என அவரிடம் கூறினேன்.

ராணுவப் புரட்சி குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து விவரங்களையும் விரிவாகக் கூற முடியாது. குற்றச்சாட்டுகளை பதிவுசெய்வது போலீசார், பாதுகாப்புப் படையினரின் பணி. அவர்களை அதைச் செய்து வருகின்றனர். பொன்சேகா குற்றவாளியா, இல்லையா என்பது எனது கவலை அல்ல. எனினும் சட்ட விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும்.

இவ்வாறு ராஜபக்ஷே தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக