5 மார்ச், 2010

கடற்கொள்ளையரிடமிருந்து இலங்கையரை மீட்க நடவடிக்கை : சர்வதேச செய்தி நிறுவனம்



சோமாலியக் கடற்கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கிச் சென்ற கப்பல் கடற்கொள்ளையர்களால் கடந்த திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்டது. இதில் 13 இலங்கையர்கள், கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 14 பேர் இருந்துள்ளனர்.

இரண்டு சர்வதேச நிறுவனங்கள் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செய்மதித் தொலைபேசியினூடாக கிழக்கு ஆபிரிக்க கடற்பகுதியிலிருந்து கடத்தல்காரர்கள் தம்மோடு தொடர்பு கொண்டதாக அந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

கொள்ளையர்களிடம் சிக்கியுள்ள இலங்கையர்களின் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா நாட்டின் இலங்கைத் தூதரகச் செயலாளர் சபருல்லாஹ் கான் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை உயரதிகாரிகளால் தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையர்கள் அனைவரையும் மிக விரைவில் விடுவிக்க ஏற்பாடுகளை செய்துவருவதாக சவூதிக்கான இலங்தைத் தூதுவர் சரத் குமார நேற்று தெரிவித்துள்ளார்.

சோமாலியக் கடற்கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கென்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜயந்த திசாநாயக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கடத்தப்பட்டுள்ளவர்களை விடுவிக்க சுமார் 226 கோடி ரூபா கொள்ளையர்களால் கோரப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக