7 ஜூன், 2011

அரசியல் தீர்வு உள்நாட்டு பிரச்சினையாகும் அந்நிய தலையீட்டை அனுமதிக்க முடியாது: ஜனாதிபதி

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்நாட்டுப் பிரச்சினையாகும். இதில் அந்நிய நாடுகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. எந்த அழுத்தத்துக்கும் அடிபணிந்தும் நாம் புலிகள் கேட்டதை ஒருபோதும் வழங்கப்போவதில்லை. மாறாக இனங்களின் உள்ளங்களை இணைக்கக்கூடிய வகையான தீர்வை வழங்க அனைத்து தரப்புக்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்துவருகின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெளிநாடுகளின் உதவியுடன் புலிகள் நவீன பொருட்களை பெற்று இந்த நாட்டில் இனங்களுக்கு இடையேயான ஒற்றுமையை சீர்குலைத்தனர். ஆனால் இன்று இந்த பன்நோக்கு தொலைத் தொடர்பு கோபுரத்தின் ஊடாக மீண்டும் வடக்கு தெற்கு மக்களை இணைக்க முடிந்துள்ளது. இந்த கோபுரத்தைப் போன்று தமிழர்களின் உரிமைகளும் அபிவிருத்திகளும் விரைவில் தலை நிமிர்ந்து நிற்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொக்காவில் பன்நோக்கு தொலைத்தொடர்பு கோபுரத்தை நேற்று திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு ஜனாதிபதி மேலும் கூறுகையில் கடந்த வருடம் கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தினோம். இதன்போது அனைத்து அரச அதிகாரிகளையும் சந்தித்து வடக்கின் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக பேசினோம். இன்று இப்பகுதிக்கு வரும்போது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. மக்களின் குறைகள் மிகவும் வேகமாக தீர்த்து வைக்கப்பட்டுவருகின்றன.

முழு நாடும் ஒரே அளவில் சீரான அபிவிருத்தியை அடையவேண்டும். ஒரே நாடு என்பதே அரசின் நோக்கமாகும். நாட்டில் என்ன நடக்கின்றது? உலகத்தில் என்ன நடக்கின்றது? என்று இலங்கை வாழ் அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் இலங்கை ஓர் ஜனநாயக நாடு. அந்த வகையில் கொக்காவில் பன்நோக்கு தொலைத்தொடர்பு கோபுரம் வடக்கு மக்களின் தகவல் உரிமையை உறுதிபடுத்தியுள்ளது.

வடக்கு தெற்கு இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த இந்த பன்நோக்கு தொலைத்தொடர்பு கோபுரம் பங்களிப்பை செய்யும்“. புலிகள் இந்தக் கோபுரத்தை அழித்தது இரு இனங்கள் இடையே உள்ள புரிந்துணர்வை இல்லாதொழிப்பதற்காகும். இதற்காக வெளிநாடுகளும் உதவிகளை செய்தன. கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ் சிங்கள மக்களிடையே இனவெறி காணப்பட்டது. சந்தேகங்கள் தோன்றின. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகின. இந்த நிலை இனித் தொடர அனுமதிக்க முடியாது. இலங்கையில் பயங்கரவாதம் இனி இருக்க முடியாது. இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளது. மக்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும். விமர்சிக்க முடியும். கருத்துக்களை தெரிவிக்க முடியும். இவற்றை பாதுகாத்துக்கொள்ளவேண்டியது அனைவரதும் கடமையாகும்.

வடக்கு கிழக்கு குழந்தைகளுக்கு கல்வி சுகாதாரம் உட்பட அனைத்தையும் கொடுப்பதே எமது அவாவாகும். வடக்கு மக்களுக்கு போதும் போதும் என்கின்ற வகையில் அனைத்தும் வழங்கப்படும். அரசியல் தீர்வை பொறுத்தவரையில் அது உள்நாட்டு விடயமாகும். அரசியல் உட்பட அனைத்து விவகாரங்களும் பேச்சுக்கள் மூலமே தீர்க்கப்படமுடியும். இதற்கான முன்னெடுப்புக்கள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அதேவேளை உள்நாட்டு விவகாரத்தில் அந்நிய நாடுகளின் தலையீட்டையோ அழுத்தங்களையோ அனுமதிக்க முடியாது. எந்த அழுத்தத்துக்கும் அடிபணிந்து புலிகள் கேட்டதை நாம் வழங்கப்போவதில்லை. பலாத்காரமாக இதனை வழங்குமாறும் எமக்கும் எவரும் கூற முடியாது.

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கக்கூடிய அரசியல் தீர்வை வழங்க முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றன. சில அரசியல்வாதிகள் புலிகளின் கோரிக்கைகளை முன்னெடுக்கின்றனர். இவர்களின் வீடுகள் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் இருந்தாலும் இவர்கள் அங்கு இருப்பதில்லை. இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் வீடுகளை வாங்கிக்கொண்டு அங்கு தமது பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக