5 மே, 2011

இலங்கை நிர்வாக சேவை : சித்தியடையாத தமிழ் மொழிமூல அதிகாரிகளுக்கு விசேட பரீட்சை






இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான பரீட்சையில் சித்தியடையாத வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் அதிகாரிகளுக்கு விசேட பரீட்சை நடத்தப்படவிருக்கிறது.

இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன உறுதியளித்துள்ளார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கான பாராளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டத்தின் போது பிரஜைகள் முன்னணித் தலைவர் ஜே. ஸ்ரீரங்கா எம். பி. கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்த உறுதிமொழியை வழகியிருக்கிறார்.

கடந்த வருடம் இடம்பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் தெரிவுக்கான பரீட்சையில் தமிழ் பரீட்சார்த்திகள் எவரும் சித்தியடையவில்லை. இதனாலேயே தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்றும் இங்கு கூறப்பட்டது.

ஏற்கனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழ் மூல பரீட்சார்த்திகளுக்கு விசேடமாக பரீட்சைகள் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை கருத்தில் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகளுக்கு விசேடமான பரீட்சை நடத்தி நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜே. ஸ்ரீரங்கா அமைச்சரிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தமிழ் மொழிமூலம் பரீட்சார்த்திகளுக்கு வினாத்தாள்கள் விசேடமாக தயாரிக்கப்பட்டு மீண்டும் பரீட்சைகள் நடாத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக