23 பிப்ரவரி, 2011

அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு அரசு திட்டவட்டமாக மறுப்பு






நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படப்போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

வெள்ளம் காரணமாக 14 வீதமான வயல் நிலங்கள் சேதமடைந்த போதும் வடக்கில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டயாரில் புதிதாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதால் அந்த நிலை சரிசெய்யப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்; அரசியல் லாபம் பெறுவதற்காக நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றன.

ஆனால் 2 மாதங்களுக்குத் தேவையான நெல் கையிருப்பில் உள்ளது. அவை நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் போகத்தில் வடக்கில் புதிதாக பயிரிடப்பட்ட வயல்களில் இருந்து அதிக அறுவடை எதிர்பார்க்கப் படுகிறது. இதன் முலம் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சரிக்கட்டப்படும். அரசாங்கம் உள்நாட்டு பொருளாதாரத்தை நாசமாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

உள்நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது இறக்குமதி செய்யப்படும். உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்தாலும் குற்றஞ்சாட்டுகின்றனர். உணவுத் தட்டுப்பாட்டின் போது பொருட்கள் இறக்குமதி செய்வது உள்நாட்டு உற்பத்தியை ஒழிப்பதாக ஆகாது.

கிழங்கு விலை குறைந்துள்ளதாகக் கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இந்த நிலையில் கிழங்கு இறக்குமதிக்கு 20 ரூபா வரி இடப்பட்டுள்ளது.

உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக