17 பிப்ரவரி, 2011

முகத்தில் காயமடைந்த நிலையில் உபேக்ஷா எம்.பி. வைத்தியசாலையில்




ஆளுந் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தென்னிலங்கையின் பிரபல நடிகைகளில் ஒருவருமான உபேக்ஷா சுவர்ணமாலி காயமடைந்த நிலையில் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராற்றை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அபேக்ஷா சுவர்ணமாலி மீது அவரது கணவன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அதிகாலை ஒருமணியளவில் பொலிஸாரின் 119 எனும் அவசர தொலைபேசிக்கு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பு கொண்டதாகவும், இதனையடுத்து வீட்டுக்கு விரைந்த பொலிஸார் ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரியவருகின்றது.

முகத்தில் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர் மீது கணவன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்ற போதிலும் கணவருக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் பொலிஸில் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லையென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பபா என அழைக்கப்படும் உபேக்ஷா சுவர்ணமாலி பிரபல தொலைக்காட்சி நடிகையாவார். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கம்பஹா மாவட்டத்தில் வெற்றிபெற்றிருந்தார். எனினும் பின்னர் அவர் அரசாங்கத் தரப்பிற்கு மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தாக்குதல் சம்பவத்தையடுத்து நேற்றுக்காலை உபேக்ஷா சுவர்ணமாலியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தான் கங்காரம பகுதியில் படப்பிடிப்பொன்றில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் இவ்விடயம் குறித்து வினவிய போது பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலிக்கு சிறுகாயம் காணப்படுவதாகவும், காயத்திற்கான காரணம் எதுவும் தமக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது.

சுவர்ணமாலி ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் 18 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக