20 ஜனவரி, 2011

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணி இனவாதத்தின் தூண்டுதலாக அமையக்கூடாது ஜாதிக ஹெல உறுமய

தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டணியமைத்து தேர்தல்களில் போட்டியிடுவது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் அவ் உரிமைகள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகவோ இனவாத போராட்டத்திற்கு தூண்டுதலாகவோ அமைந்துவிடக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

தேர்தல் மேடைகளில் பிரிவினைவாதம் பேசி வாக்குகளுக்காக நாட்டில் குழப்பத்தை உண்டு பண்ண தமிழ் கட்சிகள் முயற்சிக்குமேயானால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அக்கட்சி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளரும் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க நேற்று புதன்கிழமை கூறுகையில், தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் இணக்கப்பாட்டுடன் கூட்டணியமைத்து போட்டியிடுவது சாதாரண விடயமாகும்.

தேர்தல் சூழலுக்கு ஏற்ற வகையில் யாருடன் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் அந்த கட்சிகளின் ஜனநாயக உரிமை. இதற்கு அமைவாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆளும் மற்றும் எதிர் தரப்புகள் பல்வேறு கூட்டணியமைத்து தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளன. இவற்றுள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புளொட் உட்பட ஏனைய சில தமிழ் அரசியல் கட்சிகள் தனிக் கூட்டணியமைத்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உள்ள உரிமைகளை வெளிப்படுத்துகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பெரும்பான்மைகளாக உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அமைத்துக் கொள்ளப்படும் மேற்படி கூட்டணி நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலோ இனவாதத்தை தூண்டும் வகையிலோ அமைந்துவிடக் கூடாது. குறிப்பாக தேர்தல் மேடைகளில் பிரிவினைவாத கருத்துக்களை தெரிவிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே தமிழ் கட்சிகளின் கூட்டணி நாட்டின் இறையாண்மையையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாக்கக் கூடியதாக அமைய வேண்டும் எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக