14 டிசம்பர், 2010

பெரும்பான்மை சமூகத்தை புண்படுத்தாத அரசியல் தீர்வே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்




நல்லிணக்க ஆணைக்குழு முன் பிரதியமைச்சர் முரளிதரன்
பிரபா தான் நினைத்ததையே செய்தார்; ரஜீவ்காந்தியின் கொலை பாரிய தவறு
பெரும்பான்மை சமூகத்தைப் புண்படுத்தாத வகையில் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டமே சமூகங்களு க்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூ டியதாக அமை யும் எனப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்திமுரளிதரன் தெரிவித்தார்.

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் பெரும்பான்மை சமூகத்தைப் புண்படுத்தாத அரசியல் தீர்வு அவசியம். தற்பொழுது மாகாண சபைகள் ஊடாகவே தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அந்தந்த மாகாண மக்களே சுயமாக ஆட்சி செய்யக்கூடிய வகையில் அதிகார ங்களை வழங்கினால் அது திருப்திகரமான தீர்வாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையின் அமர்வில் சாட்சிய மளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு மேலும் சாட்சியமளித்த அவர்.

மாகாண சபைகளுக்கு தேவையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனச் சில கட்சிகள் கோரி க்கை விடுத்து வருகின்றன. குறிப்பாக மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் கூறி வருகின்றன. இவ்வாறான கோரிக்கைகள் தேவையற்றவை. இலங்கை ஒரு மிகவும் சிறிய நாடு இவ்வாறான அதிகாரங்களை வழங்குமாறு கோருவதானது பெரும்பான்மை சமூகத்திற்கு மீண்டும் சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாக அமைந்துவிடும்.

தமிழ் மக்கள் மத்தியில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி சிறந்த கல்வி வசதிகளை வழங்கி தமிழ் மக்களுக்கும் சமநிலைப் பதவிகளை வழங்குவதன் மூலம் தமிழர்களைத் திருப்திப்படுத்த முடியும். கடந்த காலங்களில் தமிழர்கள் பலர் உயர் பதவிகளிலிருந்தார்கள். ஆனால், 30 வருடங்களாகத் தொடர்ந்த போர்ச் சூழல் காரணமாக தமிழர்களுக்கான பதவி வாய்ப்புக்கள் குறைந்துள்ளன. தமிழர்களுக்கு மீண்டும் சமநிலைப் பதவிகள் வழங்கும் சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

தமிழ்க் கட்சிகள் சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்திருக்கின்றன. முதலில் அவர்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்க் கட்சிகள் தனித்து நின்று கோஷங்களை எழுப்பாமல் ஜனாதிபதியுடன் நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும். ஜனாதிபதி அதற்குத் தயாராகவே உள்ளார். தமிழர்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகவே உள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ ஏனைய கட்சிகளோ இதனை விளங்கிக் கொள்ளாமல் சத்தமிடுகின்றன.

மோதல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கில் மோதல்களால் கணவன்மாரை இழந்த 80 விதவைகள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பு வதற்கான பல்வேறு செய்திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்து நடைமுறைப்படுத்தியிருப்பதுடன், ஏனையவர்களுக்கான உதவிகளும் வழங்கப்படும்.

காத்தான்குடி பள்ளிவாசலில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் குடும்பங்களுக்கான நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா ஜனாதிபதியுடன் பேசியுள்ளார். நானும் இது பற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளேன்.

1983ம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்தே நான் உட்பட தமிழ் இளைஞர்கள் பலர் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டோம். எனினும், 2002ம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் இணக்கம் காணாததைத் தொடர்ந்து அந்த அமைப்பிலிருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு எனது ஆதரவை வழங்கி வருகின்றேன்.

2002ம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும், அதற்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அர்ப்பணிப்புடன் கலந்து கொள்ளவில்லை. எப்பொழுது புலிகள் பலவீனம் அடைகிறார்களோ அப்போது சமாதானப் பேச்சுக்குச் செல்வார்கள். பின்னர் தம்மைப் பலப்படுத்திய பின்னர் போராடுவார்கள்.

2002ம் அண்டு நடைபெற்ற 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் நான் கலந்து கொண்டிருந்தேன். இப்பேச்சுவார்த்தையில் ஏதாவது ஒரு தீர்வுக்குச் செல்லவேண்டும் என எமது குழுவுக்குத் தலைமை தாங்கிய அன்ரன் பாலசிங்கத்திடம் நான் வலியுறுத்தியிருந்தேன். ஏதாவது ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சமாதானப் பேச்சுக்களைத் தொடரமுடியும் என்பதால் சமஷ்டித்தீர்வைக் கவனத்தில் கொள்வது என்ற உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு நான் வலியுறுத்தினேன்.

எனினும், பாலசிங்கமும் ஏனையவர்களும் அஞ்சினார்கள். நான் பிரபாகரனுடன் பேசுகிறேன். நீங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுங்கள் என்று கூறியே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

நாடு திரும்பிய பின்னர் அவ்வொப்ப ந்தத்தை நான் பிரபாகரனிடம் கையளித்தேன். ஆத்திரமடைந்த அவர் ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்ததுடன், தமிழ் மக்களை நான் காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். அதன் பின்னரே நான் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி ஜனாதிபதியுடன் இணைந்து சமாதானத்துக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தேன்.

மோதல்கள் மூலம் வெற்றி கொள்ளமுடியாது. வன்முறைகளைக் கைவிட்டு ஏதாவது ஒரு தீர்வை நோக்கிச் செல்வோம் என பல தடவைகள் நான் பிரபாகரனுக்குத் கூறியிருந்தேன். ஆனால், அவர் எவற்றையும் செவிமடுக்கவில்லை. தான் நினைத்ததை மாத்திரமே நிறைவேற்றினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்தமையே புலிகள் செய்த பாரிய தவறு.

கடந்த கால அரசாங்கங்கள் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களைச் சரியாகப் புரிந்து செயற்படவில்லை. பிழையாக விளங்கிக் கொண்டமையாலேயே மோதல்கள் உக்கிரமடைந்தன. தமிழ்த் தலைவர்களும் இனவாதத்தையே தூண்டிவிட்டனர்.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயத்தை நன்கு புரிந்து கொண்டு செயற்பட்டார். புலிகள் இயக்கத்துக்குப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கிய போதும் அவர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதி அவகாசம் வழங்கவில்லை. அவர்களை அழிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாகச் செயற்பட்டமையால் புலிகளை ஒழிக்கமுடிந்தது.

அதேநேரம், வடபகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. +ஞிரி!ழ எதுவும் நடைபெறவில்லை. 30 வருடங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் வசித்த மக்கள் தமது சொந்த இடங்களில் சென்று வாழ விரும்புகின்றனர். அவர்களைள நாம் மீள்குடியமர்த்த வேண்டும். தமது சொந்தக் காணிகள் பற்றிய ஆவணங்களைக் கொண்டவர்கள் அவர்களின் இடங்களில் குடியமர்த்தப்படுகின்றனர். அரசாங்கக் காணிகளில் அவர்களைக் குடியமர்த்துங்கள் என ஜனாதிபதியோ வேறு யாருமோ எமக்குக் கூறவில்லை என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக