1 டிசம்பர், 2010

உணவுப் பொருட்கள் கூ.மொ.வி. கடைகளில் இன்று முதல் விலை குறைப்பு அரிசி, ரின்மீன், பயறு, கடலை, நெத்தலி, பாஸ்மதி உள்ளடக்கம்


பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயர்வதை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் அரசாங்க களஞ்சியங்களில் உள்ள அரிசி, குறைந்த விலையில் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து தெரிவித்தார்.

இது தவிர இன்று முதல் லக்சதொசவில் டின் மீன், பயறு, கடலை, நெத்தலி, பாஸ்மதி அரிசி, ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கடந்த பெரும் போகத்தின் போது கொள்வனவு செய்யப்பட்டு ஹிங்குரக்கொட அரிசி ஆலையில் அரிசியாக மாற்றப்பட்ட 300 மெற்றிக் தொன் அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் வைபவம் நேற்று கொழும்பு 10 இல் உள்ள சதொச களஞ்சியத்தில் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய எமது களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ள அரிசியை விலையேற்றத்திற்கு ஏற்ப சந்தையில் இட நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்படி முதற் கட்டமாக 300 மெற்றிக் தொன் அரிசி நாடு பூராகவும் உள்ள லக் சதொசகளுக்கு விநியோகிக்கப்பட்டு இன்று முதல் குறைந்த விலைக்கு விற்கப்படும். மொத்த விற்பனையாளர்களுக்கும் குறைந்த விலையில் வழங்கப்படும்.

சந்தையில் சம்பா 70 ரூபாவுக்கும் நாட்டரிசி 60 ரூபாவுக்கும், வெள்ளைப் பச்சை அரிசி 54 ரூபாவுக்கும், சிகப்பு பச்சை அரிசி 60 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது. ஆனால் இன்று முதல் லக்சதொச ஊடாக சம்பா அரிசி 63.50 ரூபாவுக்கும், நாட்டரிசி 58.50 ரூபாவுக்கும், வெள்ளை பச்சை அரிசி 45.50 ரூபாவுக்கும் சிகப்பு பச்சை அரிசி 53.50 ரூபாவுக்கும் விற்கப்படும். பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க இடமளிக்க மாட்டோம்.

இதேவேளை சந்தை விலைகளைவிட சதொசவில் குறைந்த விலைக்கு அத்தியாவசி யப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

ன்று முதல் அவற்றின் விலைகள் மேலும் குறைக்கப்படும். சதொசவில் 185 ரூபாவாக உள்ள டின் மீன் 5 ரூபாவினாலும் 85 ரூபாவாக உள்ள பாஸ்மதி அரிசி 5 ரூபா வினாலும் பயறு 5 ரூபாவினாலும் கடலை 7 ரூபாவினாலும் நெத்தலி மீன் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டு ள்ளன.

அரசாங்கம் அதிக வரி விதித்துள்ளதாலேயே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக ஐ. தே. க. தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். மொத்த வியாபாரிகள் செயற்கையாக விலைகளை உயர்த்துவதே விலை உயர்வுக்குக் காரணம். தேவையின்றி அரிசி விலைகளை உயர்த்தினால் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்படும்.

உலக சந்தையிலும் உள்நாட்டு சந்தையிலும் பொருட்களின் விலைகள் குறித்து 24 மணி நேரமும் கவனித்து வருகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக