9 நவம்பர், 2010

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மடத்திலிருந்து வெளியேறுவதற்கு இராணுவத்தினர் மறுப்பு

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான மடத்திலிருந்தும் ஆலயத்திற்கு அருகிலுள்ள கடைகளிலிருந்தும் படையினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையினை கூடிய விரைவில் மேற்கொண்டு, ஆலயத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மீளவும் பெற்றுத்தர வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினர் ஐக்கியதேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. ஆலயத்திற்கு சென்று நிர்வாகத்தினரை சந்தித்த போதே இந்தக் கோரிக்கையினை அவர்கள் விடுத்துள்ளனர். ஆலயத்தின் மடத்திலும் மற்றும் ஆலயதிற்கு சொந்தமான கடைகளிலும் இராணுவத்தில் 58 ஆவது படையணியினர் நிலைகொண்டுள்ளனர். ஆலயத்தின் மடத்தினை அவர்கள் தங்களது சமையலறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

மடத்திற்கு அருகிலுள்ள 9 மலசல கூடங்களும் படையினரால் பயன்படுத்தப்படுகின்றன. எனவே பக்தர்களின் நலன்கருதியும் எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆலய கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளமையினாலும் இந்த இடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். இதற்கான பல முயற்சிகள் எடுத்தும் அது பயனளிக்கவில்லை. எனவே விரைவில் அரசாங்க உயர்தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தி மடத்திலிருந்தும் கடைகளிலிருந்தும் இராணுவத்தினரை வெளியேற்ற உரிய முயற்சியினை எடுக்க வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினர் எம்.பி.யிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக