10 நவம்பர், 2010

யாழ். அரசாங்க அதிபரின் சாட்சியம் அதிர்ச்சியுடன் வேதனையை தருகிறது: எஸ்.சிறிதரன்

2009 தை மாதத்தில் முல்லைத்தீவை விட்டு வெளியேறிய அரச அதிபர் இமெல்டா சுகுமாரினால் 2009 மே மாதம் 18 ஆம் திகதிவரையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எவ்வாறு நேரில் கண்டதைப் போல் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளிக்க முடியும். இவ்வாறு பொய்களைக் கூறுகின்ற அரச அதிகாரிகளினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. யான எஸ்.சிறிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர காலச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவிதார். சிறிதரன் எம்.பி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

யாழ் குடாநாடாடில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இருப்பதாகவும் அதில் தற்போதைக்கு மக்கள் மீளக்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர்களும் இராணுவ அதிகாரிகளும் கூறி வருகின்றனர். ஆனால் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ். குடாநாட்டில் அதியுர் பாதுகாப்பு வலயம் என்ற எந்தவொரு இடமும் இல்லையென கூறுகின்றார்.

அண்மையில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த அவர் பொய்களை தாராளமாகவே கூறியுள்ளார். முல்லைத்தீவை விட்டு தான் 2009 தை மாதம் வெளியேறிவிட்டதாக ஆணைக்குழு முன்னிலையில் காட்சியமளித்த அரசு அதிபர் அதன் பின்னர் மே 18 ஆம் திகதிவரையிலான சம்பவங்கள் தொடர்பிலும் நேரில் கண்டதைப்போல் சாட்சியமளித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்னியில் பொது மக்களை புலிகள் கேடயங்களாகப் பயன்படுத்தியதாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

தை மாதத்தில் முல்லைத்தீவை விட்டு வெளியேறிய அவர் அதன் பின்னர் அங்கு இடம்பெற்ற சம்பவங்களை எப்படி நேரில் கண்டவரைப்போல் சாட்சியளிக்க முடியும்.

இவரது சாட்சியம் எமக்கு அதிர்ச்சியை மட்டுமல்லாது வேதனையையும் தருகின்றது. இவர் இவ்வாறு பொய் கூறுவது யாருக்காக. இவரைப்போன்ற அரச அதிகாரிகளால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக