23 நவம்பர், 2010

வருடத்தில் 70 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் தடையின்றி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

இந்திய இலங்கைக் கடற்பரப்பில் இரு நாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசு ரீதியாக ஒரு தீர்வு காணும் வகையில் தமிழக மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளது.

இந்தக் குழுவினர் கொழும்பில் சில தினங்கள் தங்கியிருந்து இலங்கைத் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளனர். கொழும்புக்குப் பயணமாவதற்கு முன்னர், இந்தப் பேச்சு வார்த்தைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்துள்ள தமிழக கடலோர விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் ஆலோசகரும், இராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத்தின் தலைவருமாகிய தேவதாஸ் வருடத்தில் 70 நாட்கள் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் பரப்பில் எதுவித இடையூறுமின்றி மீன்பிடிப்பதற்கான அனுமதி குறித்து அரசாங்கத் தரப்புடன் பேச்சு வார்த்தைகள் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

நாங்கள் வருஷம் 365 நாளும் இந்தக் கடற்பரப்பில் பரம்பரையாக பாரம்பரியமாக மீன்பிடித்த வகையில் நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். தற்போது இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை முடிந்து நிலைமை சுமூகமாக இருப்பதனால் அவர்கள் இலங்கை மீனவர்களும் மீன்பிடிப்பதைக் கருத்திற்கொண்டு இலங்கைக் கடற்படையினரின் எந்த விதமான ஆட்சேபணையும் இல்லாத வகையில், வருடத்தில் 70 நாட்கள் மட்டும் நாங்கள் நிரந்தரமாக இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்து வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என இந்தப் போச்சு வார்த்தைகளின் போது கேட்கப் போகிறோம்.

இரு தரப்பு மீனவர்களுக்கிடையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள்

இலங்கை மீனவர்களுக்கு வேண்டிய மீன் இந்திய கடற்பரப்பிலும், இந்திய மீனவர்களுக்கு வேண்டிய றால் மீன் இலங்கைக் கடற்பரப்பிலும் தான் இருக்கின்றது. இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்கும் வலை வேறு வலை. இந்திய மீனவர்கள் போட்டு மீன் பிடிக்கும் வலையோ வேறு வலைகள். அதனால் மீனவர்களிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. அதனால் தான் நாங்கள் இரண்டு மீனவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கையில் உள்ள மீனவர்கள் இந்திய கடலில் மீன் பிடிப்பதற்கும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கும் அரசாங்கம் தான் வழி வகை செய்து தர வேண்டுமே தவிர, மீனவர்களிடம் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எதுவுமே இல்லை. இந்தப் பிரச்சினையை அரசாங்கமே தீர்க்க வேண்டுமே தவிர மீனவர்களினால் தீர்க்க முடியாது ஏனென்றால் இது இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இரு நாட்டு மீனவர்களும், இரு கடற் பகுதிகளிலும் எந்த விதமான இடையூறுகளுமின்றி மீன்பிடிக்கலாம் என்று 1974 ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் தீர்வுத் திட்டம்

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எங்களுடைய தீர்வுத் திட்டம் என்ன வென்றால், 365 நாட்களும் மீன் பிடித்ததை நாங்கள் விட்டுக் கொடுத்துவிடுவோம். அவர்களுடைய நாட்டில் பிரச்சினை தீர்ந்து அவர்களும் மீன் பிடிக்கப் போக வேண்டும் என்றதனால் இதனை விட்டுக் கொடுத்து எங்களுக்கு 70 நாட்கன் மட்டும் மீன் பிடிப்பதற்கான உத்தரவாதத்தை இலங்கை அரசு எங்களுக்கு வழங்க வேண்டும். உத்தரவாதம் எப்படி இருக்க வேண்டும் என்றால் 70 நாள் கடல் மீன்பிடிப்பில் எங்களுக்கு எந்த விதமான தொந்தரவும் இடையூறும் இருக்கக் கூடாது.

பரம்பரையாக பராரம்பரியமாக மீன்பிடித்த படி நாங்கள் மீன் பிடிப்பதற்கு ஒரு உத்தரவாதத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு தீர்வைக் கொண்டு தான் நாங்கள் இங்கிருந்து செல்கின்றோம். அதே வேளை மீனவர்கள் இரண்டு தரப்பினருமே சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். ஒரு தீர்வு என்ன வென்றால் வருடத்தில் 70 நாட்கள் மட்டும் நாங்கள் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். வருடத்தில் 365 நாட்கள் இருக்கின்றன. அதில் 70 நாட்கள் மட்டும் எங்களுக்கு விட்டுக் கொடுங்கள் என கெஞ்சிக் கேட்பதற்குத்தான் போகிறோம்

இந்த தீர்வுத் திட்டம் நடைமுறையில் சாத்தியமானதே

இந்தத் திட்டமானது யாருக்குமே சிரமமில்லாத ஒரு திட்டமாகும். எப்படியென்றால் இலங்கை மீனவர்கள் இவ்வளவு நாட்களும் மீன்பிடிக்கவில்லை. ஏனென்றால் அங்கு ஒரு உள் நாட்டுப் பிரச்சினை இருந்தது. இப் போது அவர்கள் மீன் பிடிப்பதற்குக் கடலுக்குள் வந்துவிட்டார்கள். அதே வேளை நாங்கள் கேட்கின்ற 70 நாட்கள் மீன்பிடிப்பு எப்படி இருக்குமென்றால் வருடத்திலுள்ள 365 நாட்களில் 70 நாட்கள் போனால், மிகுதி 265 நாட்களும் அவர்கள் மீன் பிடிக்கலாம். நாங்கள் கடலுக்குள் செல்கின்ற 70 நாட்களிலும் இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு வரக் கூடாது. அதனை அவர்கள் எல்லோருமே ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். அதே போன்று அவர்கள் மீன் பிடிக்கின்ற 295 நாட்களும் அந்த மீனவர்கள் மீன்பிடிக்கின்ற நேரத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக நாங்கள் தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகமாட்டோம். இதனால் அவர்கள் செய்கின்ற மீன் பிடி தொழில் அதிக நாட்கள் நடந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதனால் அவர்கள் வருடத்தில் 295 நாட்களை எடுத்துக் கொள்ளட்டும் நாங்கள் இவ்வளவு நாட்களும் தொழில் செய்து கொண்டிருந்தோம். இப்போது அவர்கள் கடலுக்குள் வர ஆரம்பித்து விட்டார்கள்.

இதனால் எங்களால் முழு நாட்களும் தொழில் செய்ய முடியவில்லை. அதன் காரணமாக நாங்கள் வருடத்தில் 70 நாட்களை எடுத்துக் கொள்கிறோம். என மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டுள்ளோம். இரு நாட்டு மீனவர்களும் கொழும்பிலும் சென்னையிலும் சந்தித்துப் பேசியதில் இவ்வாறாக ஒரு முடிவு ஏற்பட்டிருக்கின்றது. இந்த முடிவை அரசாங்கம் தான் உறுதிப்படுத்த வேண்டும். சட்டமாக்க வேண்டும். இலங்கையின் மீன் பிடித்துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவதற்கும் அதன் பின்னர் அங்குள்ள மீனவர்களையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தவுள்ளோம்.

அரசாங்கம் இப்போது எங்களுக்கு பகல், இரவு கடல் என்று டோக்கன் வழங்கியிருக்கின்றார்கள் வாரத்தில் 3 நாள் கடல் என எங்களுக்கு வருடத்தில் 365 நாட்களில் ஏறக்குறைய 165 நாட்களுக்கு அரசாங்கம் டோக்கன் வழங்கியுள்ளது. கடலில் மீன் உற்பத்திக்காக இந்த டோக்கன் 45 நாட்களை அரசாங்கம் மீன்பிடிக்கக் கூடாது என தடை செய்திருக்கின்றது. இந்த நிலையில் 70 நாட்களில் நிரந்தரமாக சுபீட்சமாக நாங்கள் மீன் பிடிக்கலாம். எனச் சொல்லி இலங்கை மீனவர்கள் கொடுப்பார்களானால் அதைத் தமிழக மீனவர்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொன்வோமே தவிர அதில் எந்தவிதமான வருத்தமும் கிடையாது.

வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் வருடத்தில் ஏறக்குறைய 70 நாட்கள்

வாரத்தில் மொத்தமாக இரண்டு கடல் வீதம் என்ற வகையில் நாங்கள் பேசியிருக்கின்றோம். இப்போது நாங்கள் வாரத்தில் 3 நாட்கள் இலங்கைக் கடலுக்குச் செல்கின்றோம். அதாவது சனிக்கிழமை போய் ஞாயிற்றுக்கிழமை திரும்புவோம். திங்கட் கிழமை சென்று செவ்வாய் கிழமை திரும்பி வருவோம் புதன் கிழமை போய் வியாழக்கிழமை அங்கிருந்து திரும்பிவருவோம். இதுதான் வாரத்தில் மூன்று நாட்கள். நாங்கள் கடலுக்கு போய்வருகின்ற நடைமுறை இப்போது நடைமுறையில் இருக்கின்றது. இந்த நடைமுறையை வாரத்திற்கு இரண்டு கடல் இரண்டு நாட்கள் என பேசியிருக்கிறோம். அதன்படி சனிக்கிழமை கடலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை வருவதற்கும் புதன்கிழமை சென்று வியாழக்கிழமை திரும்பிவருவதற்கும் எங்களுக்கு அனுமதி தருமாறு அவர்களிடம் பேசியிருக்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக