25 நவம்பர், 2010

பலத்த மழையால் 15,914 பேர் பாதிப்பு; 293 வீடுகள் சேதம்

நாட்டின் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 3 ஆயிரத்து 404 குடும்பங்களை சேர்ந்த 15 ஆயிரத்து 914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 293 வீடுகள் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி, பதுளை, மாத்தறை, கம்பஹா, நுவரெலியா,மொனராகலை,குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே பலத்த மழை பெய்துள்ளது. மழையினால் மலையக பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த 293 வீடுகளில் 61 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அந்த வீடுகளில் வசித்தோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் சிலர் தங்களுடைய உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

மாத்தறை,களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் கொழும்பில் தாழ்நில பிரதேசங்கள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவதானத்துடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற பருவப்பெயர்ச்சி காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக