26 அக்டோபர், 2010

புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததை இந்திய அரசு முதற்தடவையாக ஏற்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதை முதல் தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் இலங்கை அரசு இதுவரை இறப்புச் சான்றிதழ் எதையும் அனுப்பவில்லை. மாறாக, பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற கடிதத்தை நீதிபதி ஒருவரின் அத்தாட்சியுடன் அனுப்பி வைத்தது. இதனை ஏற்றதாகவோ, மறுப்பதாகவோ இந்திய அரசு தெரிவிக்காமலிருந்தது.

சிபிஐயின் இணையத் தளங்களில், ராஜீவ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் பெயர்கள் நீக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், இப்போது இந்த இருவரது பெயரையும் ராஜீவ் கொலை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாகவும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள குறிப்பில்,

"முதன்மைக் குற்றவாளி வேலுப்பிள்ளை பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக