27 அக்டோபர், 2010

நிதியுதவி குறைவடைந்துள்ளமையால் நிவாரண உணவு விநியோகம் பாதிப்பு

உலக உணவுத் திட்டத்திற்கு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கின்ற நிதியுதவி குறைவடைந்துள்ளமை காரணமாக இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண உணவு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

நிதி உதவி பாதிப்பினால் இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகின்ற கோதுமை மா மற்றும் சீனி ஆகிய உணவுப் பொருட்களில் 50 வீதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் கூறியிருக்கின்றது.

இதனால் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.உலக உணவுத் திட்டத்திற்கான நிதியுதவியில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வரும் ஜனவரி மாதம் தொடக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற போஷாக்கு உணவு விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படும் என்றும் உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் உறவினர் நண்பர்களுடன் வசித்து வருகின்ற இடம்பெயர்ந்த மக்களும் தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும்சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்திருக்கின்றது. அந்த மக்கள் மத்தியில் உணவுத் திட்டத்தினக்ஷில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இது தெரியவந்திருக்கின்றது. இந்த சிக்கல்களை சமாளிப்பதற்காகத் தமது தங்க ஆபரணங்களை விற்பது போன்ற பல்வேறு உபாயங்களை அவர்கள் கையாண்டு வருவதாகவும் உலக உணவுத் திட்டம் தனது ஆய்வின் அடிப்படையில் தெரிவித்திருக்கின்றது.

இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கின்ற 25 ஆயிரம் பேருக்கும் உறவினர் நண்பர்களது வீடுகளில் வசிப்பவர்களுக்கும் மீள் குடியேறியுள்ள குடும்பங்களுக்குமான நிவரண உணவுப் பொருட்களையும் வடக்கு கிழக்கு மகாணங்களில் உள்ள 3 இலட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கும் 2 இலட்சம் கர்ப்பிணிமார் மற்றும் கைக் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கும் உரிய போசாக்கு உணவுப் பொருட்களையும் உலக உணவுத் திட்டமே வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக