27 அக்டோபர், 2010

சர்வாதிகாரத்துக்கு எதிராக டிசம்பர் 10ஆம் திகதி ஒரு இலட்சம் பேரை திரட்டி கொழும்பில் போராட்டம்

சர்வாதிகாரிகளின் சூதாட்ட பூமியாக இலங்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு படுமோசமான அட க்குமுறைகள் மேலோங்கிய ஜனநாயக விரோத ஆட்சி தற்போதைய நடை முறையிலுள்ளது. எனவே எதிர்காலச் சந்ததியினருக்காக நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது என்று சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் பேரணி தெரிவித்துள்ளது. காலத்தை வீணடிக்காது சர்வாதிகாரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க அனைவரும் பேதமின்றி செயற்பட முன்வர வேண்டும்.

அடுத்த மாதம் தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று ஒரு இலட்சம் பேரை தலைநகருக்கு அழைத்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து போராட்டங்களை கைவிடப் போவதில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க கட்டிடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கூறுகையில்,

17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் உத்தேச திருத்தத்தில் 18ஆவது திருத்தங்களின் ஊடாக சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்து விட்டது. எனவே நாட்டை சர்வாதிகாரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா நாட்டில் என்றுமே இல்லாத அளவிற்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையை கருத்தில் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டியுள்ளது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக ஜனநாயக ரீதியில் சுவரொட்டிகள் கூட ஒட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சுவரொட்டிகளை ஒட்டினால் சூழல் மாசடைவதாகவும் அரசாங்கத்தின் சுவரொட்டிகளுக்கு சூழல் பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக அரசாங்கத்திடம் மண்டியிடப் போவதில்லை. கூடுதலான சிறைக் கூடங்களையும் புலனாய்வு பிரிவுகளையும் அமைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதனை நோக்கி பயணிக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது என்றார்.

மங்களசமரவீர எம்.பி

இங்கு உரையாற்றிய மங்கள சமரவீர எம்.பி. கூறுகையில்,

ஜனநாயகத்தின் மரண வீடு கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் திகதியே இடம்பெற்றது. 18ஆவது திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் ஜனநாயகத்தை கொலை செய்துவிட்டது. பொது மக்களை ஏமாற்றி தலைகளின் எண்ணிக்கையினை பாராளுமன்றத்தில் அதிகரித்துக் கொண்டு மிகவும் கீழ்த்தரமான முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டு குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கான பின்னணியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசாங்க பயணத்தை உடன் நிறுத்த வேண்டும்.

இதற்கு பாரிய எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி போராட வேண்டும். மிக விரைவில் நாடு தழுவிய ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக