7 அக்டோபர், 2010

அமைச்சர் பீரிஸுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ளத் தவறியமை, சீனாவுக்கு சென்றிருந்த போது, குறித்த காலத்திற்கு மேல் அங்கு தங்கியிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பிற்பகல் 1.30 முதல் மாலை 6.30 வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை இழப்பதற்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் நடவடிக்கைகளே காரணம் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமைச்சர் பீரிஸ் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக