7 அக்டோபர், 2010

நாட்டுக்கு ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு பொன்சேகாவை விடுவிக்கவும்:கத்தோலிக்க ஆயர்கள் சம்மேளனம்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் இந்நாட்டுக்கு ஆற்றப்பட்டுள்ள பாரிய சேவையைக் கருத்திற் கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சம்மேளனத்தின் தலைவரும் பேராயருமான அதிவண. கலாநிதி மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பொதுச் செயலாளரும் அனுராதபுரம் மறை மாவட்டத்தின் ஆயருமான அதிவண. நோபர்ட் அந்தாதி ஆண்டகை ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் அவர் இந் நாட்டுக்காக ஆற்றிய விசேட தன்மைவாய்ந்த சேவை மற்றும் அதனால் அவருக்கு உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள வேதனை ஆகிய நிலைமைகளை அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே நாட்டுக்காக ஆற்றிய அவரது சேவையைக் கவனத்தில் கொண்டு அவரை சிறைத் தண்டனையிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக