7 அக்டோபர், 2010

ஜனாதிபதி விரும்பினால் நிபந்தனையின்றி பொன்சேகாவை விடுவிப்பதற்கு முடியும்:ரணில்

ஜனாதிபதி விரும்பினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய முடியும். இதற்கான அதிகாரம் இராணுவ சட்டத்தில் 65ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னிப்பு கோரியதன் பின்னர் பரிசீலனை செய்வது என்பது காலையில் பல் துலக்கியதன் பின்னர் செய்ய வேண்டிய கருமங்களுக்காக ஆலோசனை பெறுவது போன்றதாகும். பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பது எதிர்க்கட்சித் தலைவரான எனது கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்..

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், .

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் என்ற வகையில் நான் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்தேன். மேற்படி கடிதத்தை நேற்று பாராளுமன்றத்தில் சபாநாயகருக்கு வாசித்தும் காட்டினேன். அண்மையில் ஜனாதிபதி பொலனறுவையில் வைத்து சரத் பொன்சேகா முறைப்படி மன்னிப்புக் கேட்டால் அவரது விடுதலை தொடர்பாக ஆலோசிப்பதாக கூறியிருந்தார்..

சரத் பொன்சேகாவிற்கு இராணுவச் சட்டத்தின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே சட்டத்தில் 65ஆவது சரத்தில் இராணுவச் சட்டத்தினால் தண்டனைப் பெற்ற ஒருவரை குறிப்பிட்ட அளவிலோ அல்லது முழு அளவிலோ அத் தண்டனையிலிருந்து விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜனாதிபதி யாரிடமும் ஆலோசனைப் பெற தேவையில்லை. நினைத்தால் செய்யக்கூடிய அதிகாரம் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது..

சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் ஐ.தே.க. எல்லை மீறி செயற்படுவதாக அரச தரப்பினர் கூறி வருகின்றனர். பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் என்ற வகையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் செயற்பட வேண்டியது எனது கடமையாகும். 1974ஆம் ஆண்டு அமெரிக்காவில் அப்போதைய ஜனாதிபதியான ரிச்சர்ட் நிக்சன் தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கான தேர்தலின் போது மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பின்னர் தெரிவான ஜனாதிபதி கெரல் ஆர். போர்ட் தனது அதிகாரங்களை பயன்படுத்தி ரிச்சர்ட் நிக்சனை தண்டனையிலிருந்து விடுதலை செய்தார்..

எனவே, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் யார் வேண்டுமென்றாலும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விட முடியும். அமைச்சர் டிலான் பெரேரா போன்றவர்களுக்கு ஞாபக மறதி நோய் உள்ளது. கடந்த காலங்களில் ஐ.தே.க. பாராளுமன்றத்தில் பல்வேறு குற்றங்கள் காரணமாக சிறை வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர்களின் விடுதலை தொடர்பில் பேசினோம். எனவே, சரத் பொன்சேகாவிற்காக மாத்திரம் ஐ.தே.க. குரல் கொடுக்கின்றது என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக