25 அக்டோபர், 2010

சன் சீ கப்பலில் கனடா சென்றவர்களில் 30 பேர் விடுதலை

எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவை சென்றடைந்தவர்களில் 30 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எம். வி. சன் சீ கப்பலின் மூலம் கடந்த ஒகஸ்ட் மாதம் 13ஆம் திகதி 492 இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று கனடாவை அண்மித்திருந்தது.

அரசியல் புகலிடம் கோரி கனடாவை சென்றடைந்துள்ள இவர்களில் விடுதலை செய்யப்பட்டுள்ள 30 பேருக்கு அகதிகளுக்கான அந்தஸ்து கோருவதற்கான முழு உரிமை உள்ளதாக கனேடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டு;ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, கனடாவுக்குள் அரசியல் புகலிடம் கோரி சன் சீ கப்பலின் மூலம் வருகை தந்தவர்கள் சிலரின் கோரிக்கை ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கப்பலின் மூலம் கனடாவை சென்றடைந்தவர்களில் 30 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய 462 பேரும் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோரில் சிலருக்கு கனேடிய நாட்டு சட்டத்தின் பிரகாரம் அந்நாட்டில் குடியுரிமை வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சன் சீ கப்பலின் மூலம் கனடாவை அண்மித்த சிலரை அந்நாட்டு அரசு மீண்டும் நாடு கடத்தலாம் என எதிர்பார்ப்பதாக கனேடிய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், கனேடிய அரசாங்கத்தினால் இதுவரை அவ்வாறான எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக