14 செப்டம்பர், 2010

இரத்தினபுரி தோட்டமொன்றில் பதற்ற நிலை, தமிழ் மக்கள் இடம்பெயர்வு



இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன என்றும் அச்சம் காரணமாக தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது. குக்குலகல பகுதியிலுள்ள பெரும்பான்மையின தோட்டக்காவலர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போனதைத்தொடர்ந்து அவர் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத்தோட்டத்திலுள்ள தமிழர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. இதே வேளை குறித்த தோட்டத்தின் மேற்பிரிவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற கைக்கலப்புச் சம்பவமொன்றில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளார். சம்பவத்தைத்தொடர்ந்தும் தமிழர்களின் இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதனையடுத்து தோட்டங்களைச்சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளன. இந்த நிலையில் பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக