14 செப்டம்பர், 2010

உள்விவகாரங்களில் தலையீடு செய்வதனை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் - இலங்கை

உள்விவகாரங்களில் தலையீடு செய்வதனை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அண்மையில் அரசாங்கதினால் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்கா தேவையற்றதும், பொறுப்பற்றதுமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்க தனது சொந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டும் எனவும், இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை அரசாங்கம் கவனத்திற் கொள்ளாது எனவும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்க வெளியிட்ட கருத்தின் மூலம் அரசாங்கத்தை மட்டுமன்றி நாட்டின் அதிஉயர் சட்ட பீடமான உச்ச நீதிமன்றத்தையும் இழிவுபடுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

18 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டதெனவும், அமெரிக்காவின் விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத் திருத்தங்களை எவரும் விமர்சிக்க முடியாது எனவும் அதற்கான உரிமையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத் திருத்தம் ஜனநயாகத்தை உதாசீனம் செய்யும் வகையில் அமையப் பெற்றுள்ளதென அமெரிக்கா அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை வருத்தமளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளதென இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக