1 ஜூலை, 2010

தனுனவின் சொத்துக்கள் அரசுடமை




இராணுவத்துக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்த ‘ஹைகோர்ப்’ கேள்விப்பத்திர நிதி மோசடி வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவுக்கு சொந்தமான இரண்டு வங்கிகளில் ஏழு கணக்குகளில் உள்ள 15 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தையும் 1251 அமெரிக்க டொலர்களையும் அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் லங்கா ஜயரட்ன றேற்று (30) உத்தர விட்டார்.

தனுன திலகரட்ன நேற்றுக்காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்தே, கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

தனுன திலகரட்னவை இந்த மாதம் 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரி துண்டுப்பிரசுரங்களை ஒட்டுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சந்தேக நபரான தனுன திலகரட்னவுக்கு இலங்கை வங்கியின் பிரதான கிளையில் நிலையான வைப்பு கணக்குகள் நான்கும், ஹொங்கொங் அன்ட் ஷாங்ஹாய் வங்கியில் சேமிப்பு கணக்கில் 15 இலட்சத்து ஏழாயிரத்து 410 ரூபா பணமும் 1251 அமெரிக்க டொலர்களும் உள்ளன.

இந்த கணக்குகளில் உள்ள பணத்தை சந்தேக நபருக்கோ அல்லது அவரது சார்பில் வரும் வேறு எவருக்கோ கையளிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட இரு வங்கிகளினதும் நிர்வாகிகளுக்கு மாஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகு மாறு பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் அவ்வாறு அவர் ஆஜராக தவறியதனால் தனுன திலகரட்னவை கைது செய்யுமாறு மாஜிஸ்திரேட் நீதவான் மீண்டும் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை தனுன திலகரட்னவுக்கு சொந்தமாக ஏனைய சொத்துக்கள் உள்ளனவா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக