16 ஜூன், 2010

தமிழ், சிங்கள எழுத்தாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு ஏழு கோரிக்கைகளுடன் மகஜரும் கையளிப்பு


தமிழ், சிங்கள எழுத்தாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேரில் சந்தித்து தமது படைப்புக்களைக் கையளித் துள்ள இவர்கள் தமது படைப்புக்களின் சந்தைப்படுத்தல், அச்சிடலுக்கான உதவிகள் உட்பட ஏழுகோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளனர்.

தமிழ், சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் இந்த எழுத்தாளர்கள் ஜனாதிபதியைச் சந்தித்ததுடன் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேற்படி ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்காக தனியான மண்டபமொன்றையும் தமது மகஜரில் கோரியுள்ளதுடன் அமைச்சுக்கள் மூலம் தமது நூல்களைக் கொள்வனவு செய்வது சம்பந்தமாகவும் அம்மகஜரில் தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பில் தமிழ் சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் நாடறிந்த எழுத்தாளர்களான தெனகம சிறிவர்தன, தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, திக்குவல்லை கமால், ஏ.கே. ஏ. ரஸாக், திருமதி பத்மா சோமகாந்தன், ரவி இரத்தினவேல், மொகமட் ராசிக், எஸ்.அரியநாதன், வஜிர பிரபாத் விஜேசிங்க உட்பட எழுத்தாளர்கள் பலரும் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமாரவும் கலந்து கொண்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக