16 ஜூன், 2010

இருபது வருடங்களின் பின்னர் முல்லை. அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட துரித அபிவிருத்திக்கு 6 குழுக்கள் நியமனம்



முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தலா ஐவர் அடங்கிய ஆறு முக்கிய குழுக்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளன.



இதேவேளை, செப்டெம்பர் மாதத்தில் முன்னெடுக்கவுள்ள அடுத்த போகத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளவும், 9620 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம் வன்னி மாவட்ட எம்.பி.யும், கைத்தொழில் வாணிபத் துறை அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நேற்றுக் காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் 20 வருடங்களுக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட தாகவும் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற இந்த முதலாவது அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், ஹுனைஸ் பாரூக் எம்.பி., வட மாகாண பிரதம செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட அரசாங்க அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மேலும் தகவல் தருகையில்,

திட்டமிடல், வீடமைப்பு, மீன்பிடி, உள்ளூராட்சி, நீர், மின்சாரம், உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் உள்ளடங்கலாகவே ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இது தவிர, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பனை அபிவிருத்தி மற்றும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கியதாக மாவட்ட திட்டமிடல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

துரிதமாக மீளப்பெறல் திட்டம், நீண்டகால அவிவிருத்தி திட்டம், வருடாந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை இந்தக் குழு சமர்ப்பிக்கவுள்ளது என்று குறிப்பிட்டார்.

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 5000 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள என்றார்.

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்ய தலா பத்தாயிரம் ரூபா வீதம் அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளதுடன், தலா ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் மூன்று புசல் நெல்கதிர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 35 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டு வரும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு 3277 வீடுகள் அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 2100 வீடுகள் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

முல்லை மாவட்டத்திலுள்ள அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 60 வீதமான மாணவர்களின் வருகையும், 80 வீதமான ஆசிரியர்களின் வருகையும் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக